அமைச்சர் முன்னிலையில் எம்.எல்.ஏ. -சேர்மன் மோதல்!
கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அமைச்சர் சுப.தங்கவேலன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹசன் அலி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க.,நகராட்சி தலைவர் பஷீர் அகமது மோதலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சிக்கு முகமது சதக் அறக்கட்டளை சார்பில் கட்டடம் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு தமிழக அமைச்சர் தங்கவேலன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் முன்னிலை வகித்தார்.
அப்போது, ராமநாதபுரம் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. ஹசன் அலி பேசும்போது,
கீழக்கரையில் எங்கு பார்த்தாலும் குப்பையாக உள்ளது. நகராட்சி தலைவரிடம் பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை. இது வேதனைக்குரியது.
இது போன்ற கட்டடங்களை கட்டித்தருவதற்கு பதிலாக, நகராட்சியின் அவலங்களை போக்க ஆர்வலர்கள் முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதனால் ஆவேசம் அடைந்த நகராட்சி தலைவர் பசீர் அகமது, நீங்கள் எப்போது என்னிடம் புகார் செய்தீர்கள் ? உங்கள் தொகுதியில் நீங்கள் செய்த சாதனை என்ன ? என்று கேள்வி எழுப்பினார். இதனால் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது.
இதைக் கண்ட அமைச்சர் தங்கவேலன் அதிர்ச்சி அடைந்து, இருவரையும் சமரசம் செய்தார்.
இந்த மோதல் குறித்து சட்ட மன்ற உறுப்பினர் ஹசன்அலி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
நான் கீழக்கரையில் பிறந்தவன் என்பதால், இங்குள்ள குறைகள் என்ன என்ன என்று தெரியும். அதனால் அதனை நான் பல முறை நகர்மன்ற தலைவரிடம் முறையிட்டுள்ளேன்.
ஆனால் நடவடிக்கை இல்லை. அதை மேடையில் பேசியபோது, நகராட்சி தலைவர் உணர்ச்சிவசப்படுகிறார். பதவியில் இருப்பவர்கள் விமர்சனங்களை பொறுத்துக் கொள்ள பழக வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications