பயோ-பீர், பயோ-பிராந்தி: 'குடிமகன்'கள் ஆர்வம்
'குடிமகன்'களின் நலன் கருதி உடலுக்கு அதிகளவில் பாதிப்பு ஏற்படு்த்தாத பயோ-பீர், பயோ-பிராந்தி, பயோ-விஸ்கி வகைகளை டாக்டர் ஸ்ரீநிவாசா அமர்நாத் ஏற்கனவே தயாரித்தார்.
பெங்களூரைச் சேர்ந்த ஜிஎம்எல் இண்டஸ்டிரீஸ் நிறுவனம் இதன் அடிப்படையில் மதுவகைகளை தயாரித்து கோவா மற்றும் புதுச்சேரியில் விற்பனை செய்துவருகிறது.
'குடிமகன்'கள் அதிகளவில் குவியும் இந்த இரு இடங்களில் பரீட்சார்த்த முறையில் விற்கப்பட்டு, அதற்கு கிடைக்கு வரவேற்பை பொறுத்து கர்நாடகா மற்றும் கேரளாவிலும் விற்பனையை விரிவு படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
வழக்கமான சரக்கினால் ஏற்படும் பாதிப்பை விட இந்த இயற்கை மதுவகைகளால் உடல்நலனுக்கு கேடு உருவாகும் வாய்ப்புகள் மிகக் குறைவு என இதை தயாரித்த ஸ்ரீநிவாசா அமர்நாத் கூறுகிறார்.
இதுகுறித்து 10 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்ததாகக் கூறும் அவர் ஃபார்முலாவை விளக்குகையில், 'பயோ பிராந்தி பலமுறை பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் தற்போது வெற்றிகரமாக வெளியிடப்பட்டுள்ளது. சாதாரண பிராந்தியில் கொழுப்பு சத்து அதிகம் இருக்கும்.
ஆனால் பயோ பிராந்தியில் உடல் நலத்துக்கு தீங்கு இல்லாத வகையில் கொழுப்பு சத்து குறைந்த அளவு இருக்கும். இதனால் ரத்தத்தில் கொழுப்பு தன்மை அதிகரிக்காது. மேலும் வயோதிக தன்மையை அதிகரித்தல், வலிப்பு நோய் வராது.
மேலும் பயோ பிராந்தி அருந்துவதால் தலைவலியும், எரிச்சலும் இருக்காது. இந்த பயோ பிராந்தி 3 ஆண்டு ஊறப்போட்ட திராட்சை ரசம் மற்றும் கற்றாழை, அஸ்வகந்தி உள்ளிட்ட மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
பயோ பிராந்தி மற்றும் விஸ்கியில் ஆல்கஹால் 42.8 சதவீதமும், பயோ பீரில் 8 சதவீத ஆல்கஹாலும் உள்ளது' என்றார்.
போதைக்கு குறைந்தப்பட்ச உத்தரவாதம் இருப்பதாகவும் இதை ருசித்த 'குடிமகன்'கள் வர்ணிக்கின்றனர். மற்ற சரக்கை ஒப்பிடும் போது சுத்தமாக நாற்றம் இருக்காது எனவும் கூறப்படுகிறது.