Karuppu: கருப்பு படம் பார்க்க போறீங்களா? இதுதான் கதை! நிறை குறை இவ்வளவு இருக்கு! ஒரு அலசல்
சென்னை: சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியாகியுள்ள கருப்பு படம் தற்போது பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது. வசூல் ரீதியாக படம் பெரிய வெற்றியை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் உண்மையில் படம் எப்படி இருக்கிறது? ரசிகர்கள் ஏன் கொண்டாடுகிறார்கள்? அதே நேரத்தில் சிலர் ஏன் விமர்சிக்கிறார்கள்? படம் பார்த்துவிட்டு வெளியே வந்த பிறகு நமக்கு தோன்றிய விஷயங்கள் இதுதான்.

கருப்பு படத்தின் கதை
படத்தின் கதை என்று பார்த்தால், கேரளாவை சேர்ந்த ஒரு ஏழை தந்தை தனது மகளின் சிகிச்சைக்காக பெரிய நம்பிக்கையோடு சென்னை வருகிறார். மகளின் ஆபரேஷனுக்காக நகைகளை எடுத்துக்கொண்டு வரும்போது, சென்னை வந்தவுடனேயே அவர்களுடைய வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது. திருட்டு, போலீஸ் அலட்சியம், சட்ட அமைப்பின் சிக்கல்கள், ஏமாற்றும் மனிதர்கள் என எல்லாம் சேர்ந்து அந்த குடும்பத்தை முற்றிலும் உடைத்து விடுகிறது.
அந்த நேரத்தில் தான் கருப்பசாமி நம்பிக்கை கதைக்குள் வருகிறது. நீதிக்காக காத்திருக்கும் மக்களின் நம்பிக்கையாக சூர்யா 'கருப்பு' கதாபாத்திரத்தில் களமிறங்குகிறார். இந்த ஒன்-லைன் கேட்கும்போது சுவாரஸ்யமாகவே இருக்கிறது. திரையிலும் சில இடங்களில் அது வேலை செய்கிறது.
சூர்யாவின் நடிப்பு
முதலில் சொல்ல வேண்டியது சூர்யா பற்றிதான். இந்த படத்தின் பெரிய பலம் சூர்யாதான். முழு படம் முழுக்க வரவில்லை என்றாலும் அவர் வரும் காட்சிகளில் திரையரங்கில் விசில் பறக்கிறது. கருப்பசாமி தோற்றத்தில் அவரை காட்டிய விதம் ரசிகர்களை கவரும். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் பழைய மாஸ் சூர்யாவை மீண்டும் பார்க்கும் உணர்வு கிடைக்கிறது.
ஆனால் படம் முழுவதும் சூர்யாவை மட்டும் நம்பி ஓட முடியுமா என்ற கேள்வியும் வருகிறது. காரணம், முதல் பாதியில் கதை மெதுவாக நகர்கிறது. ஆர்.ஜே. பாலாஜி நடிப்பு சில இடங்களில் பெரிசாக தோன்றினாலும் சில இடங்களில் ஏன்பா இவரு இப்படி இருக்கிறார் என்று சொல்லத் தோன்றும். சில காட்சிகளில் காமெடி மாதிரி போகிறது, அடுத்த காட்சியில் சீரியஸ் டிராமா, பிறகு திடீரென மாஸ் என இந்த டோன் மாற்றம் எல்லோருக்கும் பிடிக்குமா என்பது கேள்விதான்.

நடிகைகளுக்கு வேலை இல்லை
திரிஷா இருக்கிறார், ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு பயன்படுத்தப்பட்டாரா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். பெயருக்கு பெரிய நட்சத்திரம், ஆனால் கதையில் பெரிய தாக்கம் இல்லை என்ற உணர்வு வருகிறது. அதேபோல் சுவாசிகா போன்ற நல்ல நடிகைகளுக்கும் பெரிய ஸ்கோப் இல்லை.
படத்தின் பிளஸ்
இந்திரன்ஸ் மட்டும் கவனத்தை ஈர்க்கிறார். ஒரு ஏழை தந்தையாக அவர் கொடுத்த உணர்ச்சி நல்லா கனெக்ட் ஆகிறது. மகளுக்காக தவிக்கும் ஒரு அப்பாவின் வேதனையை நம்ப வைக்கிறார்.
படத்தின் மிகப்பெரிய பிளஸ்-கருப்பசாமி நம்பிக்கை. தமிழக மக்களிடம் கிராமிய தெய்வங்களின் மீது இருக்கும் உணர்வை மையமாக வைத்து கதை கட்டியிருப்பது புதுசாக இருக்கிறது. அந்த உணர்வு காரணமாக பல காட்சிகள் ரசிகர்களை ஈர்க்கும்.

படத்தின் மைனஸ்
ஆனால் மைனஸ் இல்லையா? என்றால் நிறைய இருக்கிறது. சில காட்சிகளில் லாஜிக் தேடினால் பதில் கிடைக்காது. கதையை நகர்த்த வேண்டும் என்பதற்காக சில விஷயங்கள் மிகையாக எடுத்திருப்பது தெரிகிறது. கேரளாவில் இருந்து வந்தவர்கள் நல்லவர்களாக காட்டியது ஓகே ஆனால் தமிழர்களாக நீதித்துறை, போலீஸ், சில கதாபாத்திரங்கள் காட்டப்பட்ட விதம் நெருடலை தருகிறது.
மலையாள சினிமாவில் கூட இதுபோன்று தமிழர்களின் கேரக்டர்களை இவ்வளவு மோசமாக காட்ட மாட்டார்கள் ஆனால் ஒரு தமிழ் படத்தில் தமிழர்களை இவ்வளவு மோசமாக காட்டி இருப்பது அதுவும் கேரளா பொண்ணு, இங்கே எல்லோரும் மோசம் என்று சொல்வது போல காட்சி வைத்ததெல்லாம் ரொம்ப ஓவர். இது பலருக்கு மன வருத்தத்தையும் கொடுக்கலாம். அதிலும் கேரளா தந்தையும் மகளும் பேசுவது பலருக்கு புரியாத வகையில் இருக்கிறது. அதற்கு தமிழில் சப் ஹெட்டிங்கும் இல்லை.
இசை ஓகே. ஒளிப்பதிவு சில இடங்களில் நல்லா இருக்கு. குறிப்பாக சூர்யா வரும் காட்சிகள் பிரம்மாண்டமாக எடுத்திருக்கிறார்கள். ஆக்ஷன் காட்சிகளும் ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் இருக்கிறது.

லாஜிக் இல்லா படம்
மொத்தத்தில் கருப்பு லாஜிக் பார்த்து உட்காரும் படமா? என்றால் முழுக்க இல்லை. ஆனால் மாஸ், சென்டிமென்ட், சூர்யா ஸ்கிரீன் பிரசென்ஸ், கிராமிய தெய்வ உணர்வு இவைகளை ரசிப்பவர்களுக்கு படம் பிடிக்கும். அதனால்தான் வசூலும் ஏறிக்கொண்டே போகிறது.
ஒரு வரியில் சொன்னால் "சூர்யாவுக்காக கண்டிப்பாக ஒருமுறை பார்க்கலாம்; ஆனால் முழு திரைக்கதை எல்லோரையும் ஒரே அளவுக்கு திருப்திப்படுத்துமா என்றால் அதில் கருத்து வேறுபாடு இருக்கும்."














Click it and Unblock the Notifications