திருவண்ணாமலை டூ கோவைக்கு 596 கிராம் நகையோடு பயணம்! அரசு சொகுசு பஸ் பின் சீட்டில் எட்டி பார்த்தால்?
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் இருந்து கோவை நோக்கிச் சென்ற அரசு சொகுசு பேருந்தில், நகைக்கடை ஊழியரை ஏமாற்றி 75 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தங்கம் விலை உயர்ந்து கலக்கத்தை தந்து வரும்நிலையில், பொதுமக்களிடமிருந்து நகைகளை பறிக்கும் செயல்கள் பெரும் வேதனையையும், அதிர்ச்சியையும் கொடுத்து வருகிறது. திருவண்ணாமலை ரூட்டில் என்னதான் நடந்தது?
கோவை இடையர்வீதி பகுதியைச் சேர்ந்த 46 வயதான பிரபு, அங்குள்ள 'எம்ஜெஎம் ஜூவல்லர்ஸ்' என்ற நகைக்கடையில் கடந்த 5 வருடங்களாக வேலை பார்த்து வருகிறார்.

திருவண்ணாமலை நகை கடைகள்
இந்த கடையில் செய்யப்படும் புதிய வடிவமைப்பு நகைகளைத திருவண்ணாமலையில் உள்ள கடைகளுக்குக் கொண்டு சென்று விற்பனை செய்வது இவரது வழக்கமாகும்.. அப்படித்தான் கடந்த செவ்வாய்க்கிழமை 402 கிராம் எடை கொண்ட 41 தங்க பிரேஸ்லெட்டுகளையும் எடுத்துக் கொண்டு பிரபு திருவண்ணாமலைக்குச் சென்றுள்ளார்.
அங்குள்ள சில கடைக்ளுக்குச் சென்று நகைகளை காண்பித்துள்ளார்.. ஆனால் அவர்களுக்கு எந்த மாடலும் பிடிக்கவில்லையாம்.. அதனால் நகைகளை யாருமே வாங்கவில்லை.. இதனால் பிரபுவால் கொண்டு போன நகைகளை வியாபாரமும் செய்ய முடியவில்லை. அதற்கு பதிலாக, சில கடைகளில் பழைய நகைகளை இவரிடம் திருப்பிக் கொடுத்துள்ளனர்.
596 கிராம் நகையோடு பயணம்
இதையடுத்து, தான் கொண்டு சென்ற புதிய நகைகள் மற்றும் கடைகளில் வாங்கிய பழைய நகைகள் என மொத்தம் 596 கிராம் (சுமார் 75 பவுன்) தங்க நகைகளை ஒரு பையில் வைத்துக்கொண்டு பிரபு மீண்டும் கோவைக்குப் புறப்பட்டுள்ளார். அன்று இரவு அரசு ஏசி பேருந்தில் ஏறி உட்கார்ந்துள்ளார்.
நள்ளிரவு 1.30 மணியளவில் சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் மார்க்கெட் அருகில் உள்ள ஒரு பேக்கரி கடை முன்பு, டீ குடிப்பதற்காகப் பஸ்ஸை டிரைவர் நிறுத்தி உள்ளார்..
நகைப்பை பாதுகாப்பாக இருக்கும் என நினைத்து, அதைத் தனது சீட்டிலேயே வைத்துவிட்டு பிரபு டீ குடிக்கக் கீழே இறங்கினார். கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் பஸ்ஸூக்குள் வந்து பார்த்தபோது, சீட்டில் இருந்த நகைப்பை காணாமல் போயிருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். பதற்றமடைந்த அவர் பஸ் முழுவதும் தேடியும் பை கிடைக்கவில்லை.
திருவண்ணாமலை டூ கோவை
அதே நேரத்தில், அவரின் பின் சீட்டில் உட்கார்ந்திருந்த 2 இரண்டு நபர்களும் பஸ்ஸில் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாகக் காரிப்பட்டி காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் பேருந்தில் தீவிர சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்ட அந்தப் பேருந்து இடையில் செங்கம் என்ற இடத்தில் நின்றபோது 6 பேர் ஏறியுள்ளனர். அதன்பிறகு அயோத்தியாப்பட்டணத்தில்தான் பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த இடைவெளியில், பின் சீட்டில் இருந்த இரண்டு பேர் மட்டும் மாயமாகியுள்ளனர். அதனால் நள்ளிரவில் பிரபு டீ குடிக்க இறங்கிய அந்தச் சில நிமிடங்களைப் பயன்படுத்திக் கொண்டு, பின் சீட்டில் ஆசாமிகள் தான் 75 பவுன் நகைகளை கொள்ளையடித்துத் தப்பிச் சென்றுள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது. இந்தத் துணிகரக் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications