சிறகடிக்க ஆசை: சொத்துக்காக மனசு மாறும் மனோஜ்.. முத்து வீட்டுக்குள் புகுந்த ரவுடிகள்.. விஜயா செய்த செம சம்பவம்
சென்னை: சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடு ரசிகர்கள் எதிர்பார்க்காத திருப்பங்களால் பரபரப்பாக அமைந்தது. ஒரு பக்கம் மனோஜை திருமணம் செய்து வைக்க கோடிக்கணக்கான சொத்தை தூக்கிக் காட்டும் கனகாவின் அம்மா, மறுபக்கம் முத்து வீட்டுக்குள் ரெளடிகளை அனுப்பி மிரட்டும் சிந்தாமணி என கதை வேகம் பிடித்துள்ளது.
சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
எப்போதும் போல ஷோரூமுக்கு மனநலம் பாதிக்கப்பட்ட கனகாவும், அவரது அம்மாவும் வருகிறார்கள். கனகா வந்தாலே ஆப்பிள் ஜூஸ் வாங்கிக் கொடுக்கும் மனோஜ், இந்த முறையும் அதையே செய்ய நினைக்கிறார். ஆனால் இந்த முறை கனகாவின் அம்மா பேச வந்த விஷயம் மனோஜின் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றும் அளவுக்கு இருந்தது.
"என் மகளுக்கு எவ்வளவோ சிகிச்சை பார்த்தோம். டாக்டர்கள் கடைசியாக கல்யாணம் பண்ணி வைத்தால் சரியாகிவிடுவாள் என்று சொன்னார்கள். அதனால்தான் உங்களை பார்க்க வந்திருக்கிறோம்" என்று கூறிய அவர், மாப்பிள்ளை வேறு யாரும் இல்லை, நீங்கள்தான் என்று சொல்லியதும் மனோஜ் அதிர்ச்சியில் உறைந்து போகிறார்.

ஆரம்பத்தில் அதிர்ச்சியாக இருந்த மனோஜின் முகம், "என் மகளுக்கு கோடிக்கணக்கில் சொத்து இருக்கிறது. அது முழுவதும் அவளுக்குத்தான்" என்ற ஒரு வரியை கேட்டதும் மெதுவாக மாறுகிறது. பணத்தை கேட்டவுடன் மனோஜின் முகத்தில் தெரியும் மாற்றமே இன்றைய எபிசோடின் ஹைலைட்டாக அமைந்தது. இந்த திருமணத்திற்கு மனோஜ் சம்மதம் சொல்வாரா என்ற கேள்வியை சீரியல் இன்னும் சஸ்பென்ஸாகவே வைத்திருக்கிறது. ஏற்கனவே ரோகிணி பஞ்சாயத்து இருந்தாலும் ரோகிணி மீது ஒரு விதத்தில் பாசம் இருப்பது போல காட்டும் மனோஜ் பணம் என்றதும் பச்சோந்தியாக மாறிவிடுகிறார்.

முத்து வீட்டில் பிரச்சனை
இதற்கிடையில், வீட்டில் அமைதியாக இருந்த முத்து குடும்பத்துக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. திடீரென சில ரெளடிகள் வீட்டுக்குள் புகுந்து, "முத்து எங்க?" என்று கேட்டு மனோஜையே தாக்க ஆரம்பிக்கிறார்கள். அப்போது அவர்களை தடுக்க வரும் முத்துவுக்கும் அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது.
அந்த நேரத்தில் சிந்தாமணியும் அவரது கணவரும் வீட்டுக்குள் நுழைந்து, "என் பொண்ணை எங்கடா மறைச்சு வச்சிருக்க?" என்று முத்துவிடம் சண்டை போடுகிறார்கள். அவர்கள்தான் ரெளடிகளை அனுப்பியிருப்பது தெரியவர, வீட்டில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

மிரட்டும் சிந்தாமணி
இதையும் தாண்டி விஜயா, "எனக்கு துரோகம் பண்ணுனே... அதான் உனக்கு இப்படி நடக்குது" என்று சாபம் விட, சிந்தாமணி மீனா குடும்பத்தினரையும் கடுமையாக திட்டுகிறார். தனது அடியாட்களிடம் முத்துவை அடிக்க சொல்லும் அளவுக்கு நிலைமை மோசமாகிறது.
ஆனால் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து, "இன்னும் ஒரு நிமிஷம் இருந்தா போலீஸை கூப்பிடுவோம்" என்று எச்சரித்ததும், சிந்தாமணியும் அவரது ஆட்களும் அங்கிருந்து வெளியேறுகிறார்கள்.

ஒரே எபிசோடில் மனோஜின் பேராசை, கனகாவின் திருமண ட்விஸ்ட், முத்து வீட்டில் ரெளடி அட்டகாசம், சிந்தாமணியின் மிரட்டல் என அடுத்தடுத்த திருப்பங்கள் ரசிகர்களை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளன.
இப்போது ரசிகர்கள் மத்தியில் இரண்டு கேள்விகள்தான் அதிகமாக பேசப்படுகிறது. கோடி சொத்துக்காக மனோஜ் கனகாவை திருமணம் செய்ய சம்மதிப்பாரா? அப்படி நடந்தால் ரோகினி என்ன செய்யப் போகிறார்? அதேபோல் சிந்தாமணி மீண்டும் முத்து குடும்பத்தை குறிவைத்து அடுத்த என்ன பிரச்சனையை கிளப்பப் போகிறார்? என்பதுதான் அடுத்த எபிசோடின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications