ரியல் எஸ்டேட் முதல் சோலார் வரை லட்சங்களில் மிச்சம்! கோவை தொழில் துறையினருக்கு அரசால் இன்ப அதிர்ச்சி
கோவை: கோவை மற்றும் தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் உள்ள தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான மின்சாரத்தை தாங்களே தயாரித்து கொள்ள காற்றாலை மற்றும் சோலார் மின் நிலையங்களை அமைத்து வருகின்றன. இப்படி உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில், சொந்தப் பயன்பாடு போக மீதமுள்ள மின்சாரத்தை தமிழ்நாடு மின்வாரியத்திற்கு விற்பனை செய்யவும், சேமித்து வைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதை பற்றின ஒரு பாசிட்டிவ் தகவல்தான் தற்போது வெளியாகி உள்ளது.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், ஒரு மெகாவாட் சோலார் மின் உற்பத்தி கலன் அமைப்பதற்கான அனுமதியை பெற வேண்டுமானால், 25 லட்சம் ரூபாய் முதல் 30 லட்சம் ரூபாய் வரை பார்ட்டி பண்ட் என்ற பெயரில் மறைமுகமாகப் பணம் வசூலிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன..

திமுக அரசு மீது புகார்
மேலும், கூரைகளில் சோலார் பேனல் அமைத்து மின்சாரம் தயாரிப்போருக்கு நெட் மீட்டரிங் கட்டணமும் விதிக்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் நொந்து சொன்னார்கள்.. இதனால், இந்த கட்டணங்கள் அனைத்தும் தொழில் துறையினருக்கு சுமையாகவும், அதிர்ச்சியாகவும் இருந்து வருகிறது..
இப்படிப்பட்ட சூழலில், மேற்கண்ட பிரச்சனைகளுக்கு தவெக அரசு முற்றப்புள்ளி வைத்துள்ளது.. புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக ஆட்சியில், சுயமாக மின் உற்பத்தி செய்ய நிறுவப்படும் சோலார் பேனல்களுக்கு இனிமேல் பார்ட்டி பண்ட் எதுவும் கிடையாது என்று அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தவெக அரசு இன்ப அதிர்ச்சி
அத்துடன், இதற்கான அனுமதிகளும் தாமதம் இல்லாமல் உடனடியாக வழங்கப்பட்டும் வருகின்றன. அரசின் இந்த அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள் ஒட்டுமொத்த தொழிலதிபர்களுக்கும் இன்ப அதிர்ச்சியை தந்துள்ளதாம்.. அரசின் இந்த துரித நடவடிக்கையை இவர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லையாம்.
இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள தொழில்துறையினர், "தமிழகத்தில் மின் உற்பத்தியை அதிகரிக்கவும், தொழில் வளர்ச்சியை ஊக்கப்படுத்தவும் இதுபோன்ற மறைமுகக் கட்டணங்களை கண்டறிந்து ரத்து செய்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதேபோல் மற்ற துறைகளிலும் நிலவும் முறைகேடுகளைக் கண்டறிந்து அரசு உடனடியாக களைய வேண்டும்.
கோவை தொழில் துறையினர்
அதேபோல தமிழக மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார் வெள்ளை அறிக்கை வெளியிட்டபோது, மின் கட்டணம் உயர்த்தப்படாது என்று அறிவித்துள்ளதும் எங்களுக்கு நிம்மதியையும், நம்பிக்கையையும் தந்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளனர்.
சோலார் மின் உற்பத்தி மட்டுமல்லாமல், ரியல் எஸ்டேட் துறையிலும் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அந்தத் துறையினர் மீண்டும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.. நகர் ஊரமைப்புத் திட்டத்தில் (டிடிசிபி) புதிய மனைப்பிரிவுகளுக்கான அனுமதியைப் பெற, இதுவரை சதுர அடி கணக்கில் லட்சக்கணக்கில் தனிப்பட்ட முறையில் பணம் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.
ரியல் எஸ்டேட் & மின் உற்பத்தி
வழக்கமான அரசு கட்டணத்தை விட, மூன்று முதல் 4 மடங்கு வரை கூடுதலாக வசூலிக்கப்பட்டு வந்த இந்த மறைமுகத் தொகைகள் அனைத்தும் இப்போது முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களால் நீண்ட நாட்களாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த கட்டிட மற்றும் மனைப்பிரிவு அனுமதி கோப்புகள் அனைத்தும் தற்போது வேகமாகத் தூசு தட்டப்பட்டு வருகின்றன. முறைகேடான கட்டணங்கள் எதுவுமே இல்லாமல், தங்களுக்குரிய அனுமதிகள் அனைத்தும் மிக விரைவாகக் கிடைப்பதாக ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையினர் நிம்மதியோடு தெரிவித்துள்ளனர்...












Click it and Unblock the Notifications