"பெட்டிக்கு இவ்வளவு" சபையில் விஜய் போட்ட குண்டு! மொத்தமாக சிக்கும் திமுக "பார்ட்டி ஃபண்ட்" விவகாரம்?
சென்னை: தமிழக அரசியல் களம் இப்போது "பார்ட்டி ஃபண்ட்" (Party Fund) என்ற ஒற்றைச் சொல்லைச் சுற்றித்தான் சுழன்று கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு இந்த வார்த்தை அனைவராலுமே முணுமுணுக்கப்பட்டு வருகிறது.. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, கடந்த கால நிர்வாக நடைமுறைகள் ஒவ்வொன்றாகத் தோண்டப்பட்டு வரும் நேரத்தில், இந்த வார்த்தை மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டுபண்ணி வருகிறது.. இதனால் தவெக அரசுக்கும் எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையேயான அரசியல் போர் எக்கச்சக்கமாக எகிறிவிட்டது என்றே சொல்லலாம்.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில், பார்ட்டி ஃபண்ட் என்ற வார்த்தையை மிக வெளிப்படையாகவே சொன்னார் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்.

அவையில் பேசிய அவர், "கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் டாஸ்மாக் கடைகளில் பெட்டிக்கு இவ்வளவு என்று 'பார்ட்டி ஃபண்ட்' என்ற பெயரில் மறைமுகமாகப் பணம் வசூலிக்கப்பட்டது. இப்படி மக்கள் பணத்தை முறைகேடாக சுரண்டிய ஆட்சியைத்தான் நாம் பார்த்து வந்தோம்.
வெள்ளை அறிக்கையும், திமுக மீதான புகாரும்
ஆனால், நம்முடைய புதிய ஆட்சியில் அத்தகைய முறைகேடுகளுக்கும், லஞ்சப் பண வசூலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இனிமேல் எங்கும், எதற்காகவும் மக்கள் யாரும் ஒரு பைசா கூட லஞ்சமாகக் கொடுக்கத் தேவையில்லை" என்றார்.. முதலமைச்சரின் இந்த நேரடித் தாக்குதல் அவையில் பெரும் புயலையே கிளப்பியது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், அடுத்த அஸ்திரத்தை ஏவியுள்ளார் மின்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கடந்த 25 ஆண்டுகால அதாவது 2001 முதல் 2026 மார்ச் வரையிலான செயல்பாடுகள் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் மூலம், கடந்த திமுக அரசின் மின்துறை செயல்பாடுகள் மீது அடுக்கடுக்கான புகார்களை அவர் முன்வைத்துள்ளார்.
பற்றியெரியும் 'பார்ட்டி ஃபண்ட்' விவகாரம்
மின்சாரத் துறையில் எந்தவொரு ஒப்பந்தமாக இருந்தாலும், அதில் 30 முதல் 35 சதவீதம் வரை கமிஷனாகக் கொடுத்தால் மட்டுமே வேலைகள் நடந்தன என்றும், பணி மாறுதல் முதல் புதிய பணி நியமனங்கள் வரை எல்லாவற்றிற்கும் 'பார்ட்டி ஃபண்ட்' என்ற பெயரில் வசூல் வேட்டை நடத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் நிர்மல்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
குறிப்பாக, கடந்த 2021-ஆம் ஆண்டில் சுமார் 5,000 பேரிடம் கேங் மேன் பணிக்காகப் பணம் வாங்கப்பட்டு, இன்று வரை அவர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கப்படாமல் ஏமாற்றப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், இந்த 'பார்ட்டி ஃபண்ட்' விவகாரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஆதாரங்களுடன் புகார் அளித்தால், நிச்சயம் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
உதயநிதி கேட்ட கேள்வி
இவ்வாறு டாஸ்மாக், மின்துறை, ரியல் எஸ்டேட் மற்றும் நகர் ஊரமைப்புத் திட்டம் (டிடிசிபி) என அனைத்துத் துறைகளிலும் கடந்த ஆட்சியில் கட்சி நிதி என்ற பெயரில் மறைமுக வசூல் நடந்திருப்பதாக தவெக அமைச்சர்கள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகின்றனர்.
ஆனால் இந்த ஆளுங்கட்சியின் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் முற்றிலுமாக மறுத்து, அவையிலேயே கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். "எந்தக் கட்சியின் பெயரில், யார் மூலமாக இந்தப் பணம் வசூலிக்கப்பட்டது என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்கத் தயாராக இருக்கிறீர்களா?" என்று உதயநிதி ஸ்டாலின் ஆளுங்கட்சிக்குச் சவால் விடுத்துள்ளார்.
விஜய் கையிலெடுக்கும் பிளான்
ஆனால், இந்த அரசியல் மோதல் இத்துடன் முடியாது போலும்.. காரணம், வரும் ஜூலை இரண்டாவது வாரத்தில், தமிழக அரசின் பட்ஜெட் தாக்கலுடன் அடுத்த சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. அந்த கூட்டத்தொடரின்போது, எதிர்க்கட்சியின் சவாலை எதிர்கொள்ளும் விதமாக, கடந்த ஆட்சியில் நடைபெற்ற "பார்ட்டி ஃபண்ட்" வசூல் குறித்த முழுமையான விவரங்களையும், ஆவணங்களையும் சட்டசபையில் உடைக்க முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதற்காக அனைத்துத் துறைகளிலும் நடந்த மறைமுகப் பணப் பரிவர்த்தனைகள் மற்றும் முறைகேடுகள் குறித்த துல்லியமான விவரங்களைத் திரட்டுமாறு தனது அமைச்சர்களுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புயலை கிளப்புமா திமுக?
அரசியல் ரீதியான குற்றச்சாட்டுகளாக இவை பார்க்கப்பட்டாலும், நிர்வாக ரீதியாக லஞ்சமும், மறைமுகக் கட்டணங்களும் ஒழிக்கப்படுவது ஒட்டுமொத்த பொதுமக்களுக்கும், தொழில் துறையினருக்கும் நிம்மதியைத் தரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
அந்தவகையில், வரும் ஜூலை மாத சட்டமன்றக் கூட்டத்தொடரில் இந்த 'பார்ட்டி ஃபண்ட்' விவகாரம் எந்தப் புயலைக் கிளப்பப் போகிறது, ஆளுங்கட்சி என்னென்ன ஆதாரங்களை முன்வைக்கப் போகிறது என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications