தங்க நகைச்சீட்டு போட்டவர்களுக்கு சிக்கல்? இது என்ன புது பிரச்சனை! ஆனந்த் சீனிவாசன் தந்த அலர்ட்
சென்னை: பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு தங்க நகை வியாபாரிகள் கூட்டமைப்பு தங்கக் காசுகள் விற்பனையை நிறுத்துவது மற்றும் சேமிப்புத் திட்டங்களில் தங்கம் வழங்கும் முறையில் மாற்றங்களை அறிவித்துள்ளதாகத் தகவல் வெளியானது. இது தொடர்பாகப் பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கியமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி முக்கியமான ஒரு கோரிக்கையை விடுத்தார். அதாவது வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்கச் சொன்ன அவர், சிக்கனத்தைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தினார். மேலும், அடுத்த ஓராண்டிற்குத் தங்கத்தை வாங்குவதையும் நிறுத்துமாறு பிரதமர் மோடி கோரிக்கை விடுத்தார். அதன்படி அவரது கார் கான்வாயும் குறைக்கப்பட்டது.

பிரதமர் மோடி
வளைகுடாவில் நிலவும் பதற்றம் காரணமாகச் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி விலை உச்சத்தில் இருக்கிறது. கச்சா எண்ணெய்யை முழுமையாக இறக்குமதி செய்யும் இந்தியா போன்ற நாடுகளுக்கு இதனால் அந்நியச் செலாவணி பாதிப்பு ஏற்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டே பிரதமர் மோடி இந்தக் கோரிக்கையை விடுத்தார்.
ஆனந்த் சீனிவாசன்
அதைத் தொடர்ந்து தங்க நகை வியாபாரிகள் கூட்டமைப்பு தங்கக் காயின் விற்பனையை நிறுத்துவதாக அறிவித்தது. இது தொடர்பாகப் பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கியமான கருத்துகளைக் கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "தங்க காயின்கள் விற்பனையை நிறுத்துவதாக நகைக்கடை வியாபாரிகள் அறிவித்துள்ளனர். இதை ஒன்றும் அவர்கள் தேசப்பற்றின் காரணமாக எடுக்கவில்லை. தங்க காயின்களில் அவர்களுக்கு லாபம் மிகக் குறைவு.. நகைகளில் தான் லாபம் அதிகம். ஆனால், இப்போது நகைகளில் செய்கூலி அதிகமாக இருப்பதால், மக்கள் நகைகளைத் தவிர்த்துவிட்டுத் தங்கக் காசுகளையே அதிகம் வாங்குகின்றனர்.
தங்க சீட்டு
தங்கச் சீட்டையும் கூட நிறுத்துவதாகச் சொல்லியுள்ளனர். இதில் அவர்கள் நிலைப்பாடு என்ன என்பதை நாம் உறுதி செய்துவிட்டே பேச வேண்டும். ஆனால், நகைச் சீட்டை நிறுத்தினார்கள் என்றால் அது மக்களுக்கு ஒரு பெரிய அடியாகவே இருக்கும். ஏனென்றால் பொதுமக்கள் எப்போதும் தங்கத்தைக் குருவி சேர்ப்பது போலச் சேர்த்துத் தான் கடைசியில் வாங்குவார்கள். 11 மாசம் சேர்த்துவிட்டு 12வது மாசம் நகையை வாங்குவார்கள். இந்த நகைச்சீட்டிற்காகப் பல நகைக்கடைகள் செயக்கூலி இல்லை, சேதாரம் இல்லை என்று சலுகைகளைக் கூட அறிவிப்பார்கள். இதை நிறுத்தினால் அது பெரிய அடி தான்.
இதனால் ஏற்படும் லாப இழப்பைத் தவிர்க்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனினும், மக்கள் நம்பகமான பெரிய பிராண்டுகளிடம் இருந்தோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ தொடர்ந்து தங்கக் காசுகளை வாங்குவதை நிறுத்த முடியாது. அப்படி இல்லையென்றால் தேசிய அளவில் உள்ள கடைகளில் இருந்தும் தங்க காயின்களை தொடர்ந்து வாங்கவே செய்வார்கள்.
டிஜிட்டல் தங்கம்
அதேபோல டிஜிட்டல் தங்கம் மற்றும் தங்க ETFs (Gold ETFs) போன்றவற்றைத் தடை செய்யவும் நகை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த காலத்தில் பலரும் டிஜிட்டல் முறையில் தங்கத்தை வாங்கி வைக்கிறார்கள். இதனால் நகை விற்பனை பாதிக்கப்படுகிறது. எனவே, தங்களின் வணிகப் பாதிப்பைச் சரி செய்வதற்காகவே இதுபோல கோரிக்கை வைத்துள்ளனர். முதலீட்டாளர்கள் டிஜிட்டல் முறைகளுக்கு மாறுவதால் தங்கள் விற்பனை பாதிக்கப்படுவதாக அவர்கள் கருதுகின்றனர் . இப்போது டிஜிட்டல் தங்கத்திற்குத் தடை விதித்தால் அந்தப் பணம் தங்களுக்கு வரும் என்பதே இவர்கள் கருத்து!" என்றார்.














Click it and Unblock the Notifications