என்னதான் ஆச்சு உங்க 2 பேருக்கும்.. மீண்டும் சொதப்பிய சஞ்சு சாம்சன், இஷான் கிஷன்.. கடுப்பான கம்பீர்!
லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியிலும் இந்திய அணியின் நட்சத்திர வீரரான சஞ்சு சாம்சன் 1 ரன்னிலும், இஷான் கிஷன் டக் அவுட்டாகியும் ஏமாற்றம் அளித்துள்ளனர். இதனால் இருவரில் ஒருவரை நீக்கிவிட்டு இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷியை சேர்க்க வேண்டும் என்ற குரல் அதிகரித்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் இந்திய அணிக்காக சஞ்சு சாம்சன் - அபிஷேக் சர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. ஸ்விங்கிற்கு சாதகமான பிட்ச் என்பதால், சஞ்சு சாம்சன் முதல் ஓவரிலேயே தடுமாறினார்.

அதனை கணித்து சகிப் மஹ்மூத் வீசிய பந்தில் பவுண்டரி அடிக்க முயன்று சஞ்சு சாம்சன் 1 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். அந்த ஓவரிலேயே இஷான் கிஷனும் அவசரத்தில் ரன் அவுட்டாகி ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். தொடர்ச்சியாக 3வது போட்டியாக இந்த இரு வீரர்களும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தால், பெரிய இலக்கை நிர்ணயிக்கும் வகையில் டாப் ஆர்டர் வீரர்கள் சிறப்பாக விளையாட வேண்டும். ஆனால் சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் சொதப்பலுக்கு மேல் சொதப்பலை செய்து வருகின்றனர். சஞ்சு சாம்சன் தொடர்ச்சியாக 3வது இன்னிங்ஸாக ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார்.
இதனால் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அதிருப்தியை வெளிப்படுத்தினார். ஏற்கனவே அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் இழந்தது. இதனால் கம்பீர் மீதான விமர்சனங்கள் அதிகரித்தது. அதுமட்டுமல்லாமல் இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி தொடர்ந்து 3வது போட்டியாக பெஞ்சில் அமர வைக்கப்பட்டிருக்கிறார்.
வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டத்தை பார்க்க உலகம் முழுவதும் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அவருக்கு வாய்ப்பு கொடுப்பதற்கு முன்பாகவே சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் ஃபார்முக்கு வருவது அவசியம். இல்லையென்றால் வைபவ் சூர்யவன்ஷிக்காக இருவரில் ஒருவர் பெஞ்சில் அமர வேண்டிய சூழல் ஏற்படும் என்று கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications