டெண்டருக்கு பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகாரளித்தால் பணம் திரும்ப கிடைக்கும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
சென்னை: கடந்த ஆட்சிகளில் பணம் கொடுத்து ஏமாந்த பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரர்கள் அதுகுறித்துப் புகார் அளிக்கலாம் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார். இதற்காக இமெயில் முகவரியையும் அளித்துள்ளார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.
பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு அரசின் நிர்வாகம் மிக நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் நடைபெற்று வருகிறது. ஆனால். கடந்த ஆட்சிகளில் தமிழ்நாடு அரசின் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறையில் மையப்படுத்தப்பட்ட ஊழல்கள், திட்டமிடப்பட்ட விதிமீறல்கள், நிர்ணயிக்கப்பட்ட லஞ்சத்தொகை எனப் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக அறியமுடிகிறது.

பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளின் ஒப்பந்ததாரர்களை அப்போது அதிகாரத்தில் இருந்தவர்கள். அவர்களின் குடும்ப உறவுகள், அதிகாரத்தில் இருந்தவர்களுக்கு நெருக்கமாக இருந்தவர்கள் எனப் பலரிடமும் ஒப்பந்தம் தருவதாக வாக்குறுதி கொடுத்து பணம் வாங்கியுள்ளனர். பலரிடம் பணத்தையும் பெற்றுக் கொண்டு முறையாக வேலைகளையும் ஒதுக்காமல், ஒப்பந்ததாரர்கள் பலர் ஏமாற்றப்பட்டுள்ளார்கள்.
இது தொடர்பான பல புகார்கள் தற்போது எங்களுக்கு வந்து கொண்டிருக்கின்றன. மேலும். இதுபோல் பாதிக்கப்பட்டவர்களோ, பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டவர்களோ புகார் கொடுக்க விரும்பினால், என்னிடமோ அல்லது லஞ்ச ஒழிப்பு (DVAC) காவல்துறையினரிடமோ புகார் கொடுக்கலாம். என்னிடம் நேரடியாகவோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சலிலோ புகார் தெரிவிக்கலாம்.

புகார் தெரிவிப்பவர்கள் பற்றிய விபரங்கள் பாதுகாக்கப்படுவதுடன், அவர்களுக்குத் தேவையான சட்ட பாதுகாப்பும் வழங்கப்படும். விரைவில் அவர்கள் இழந்த பணத்தை மீட்க உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இனிவரும் காலங்களில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறையில், இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறாது. ஒப்பந்தங்கள் அனைத்தும் நேர்மையுடனும், வெளிப்படைத் தன்மையுடனும் நடைபெறும் என்பதையும் இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் பதிவு செய்யப்பட்ட ஒப்பந்ததாரர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முந்தைய ஆட்சிக் காலங்களில் டெண்டர் எடுப்பதற்கு முன்பே 'முதலமைச்சர் நிதி', 'அமைச்சர் நிதி' மற்றும் 'கட்சி நிதி' என்ற பெயர்களில் திட்ட மதிப்பில் சுமார் 25 சதவீதம் வரை கமிஷன் தொகையாகப் பெறப்பட்டு ஒப்பந்ததாரர்கள் ஏமாற்றப்பட்டதாகக் குற்றம் சாட்டினார்.
அவ்வாறு கமிஷன் கொடுத்து ஏமாந்தவர்கள், முறைகேடுகள் குறித்து தகுந்த ஆதாரங்களுடன் புகார் அளித்தால் தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார். தற்போதுள்ள அரசில் அமைச்சர்களோ, கட்சி நிர்வாகிகளோ அல்லது அதிகாரிகளோ ஒப்பந்ததாரர்களிடம் இருந்து எந்தவொரு லஞ்சமோ, கமிஷனோ கோர மாட்டார்கள் என்றும், அனைத்து டெண்டர்களும் முற்றிலும் வெளிப்படையான முறையில் ஆன்லைன் வாயிலாக மட்டுமே ஒதுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications