மது வாங்க ஆதார் கார்டு வேண்டும்.. மதுரை மனமகிழ்மன்றத்தில் அதிரடி அறிவிப்பின் பின்னணி
மதுரை: தமிழ்நாட்டில் ஏராளமான மதுக்கடைகள் ஒரே நாளில் அடுத்தடுத்து மூடப்பட்டன. குறிப்பாக பேருந்து நிலையம், கல்வி நிலையம், கோயில், மசூதி, தேவாலயங்கள் அருகில் இருந்த மதுக்கடைகள் மூடப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக மதுப்பிரியர்கள் மது வாங்க திண்டாடுகிறார்கள். இதனால் அருகில் உள்ள மனமகிழ்மன்றங்கல் மது வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள். மதுரையில் மனமகிழ்மன்றத்தில் மது வாங்க குவிந்த நிலையில், ஆதார் அட்டையுடன் வருபவர்களுக்கு மட்டுமே மதுபாட்டில் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பலர் வீடுகளுக்கு சென்று அடையாள அட்டையை எடுத்து வந்து மதுபாட்டில்களை மதுபிரியர்கள் வாங்கி சென்றுள்ளார்கள்.

தமிழ்நாட்டில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி கடந்த மே 10ம் தேதி அமைந்தது. விஜய் முதல்வரான உடனேயே பள்ளிகள், வழிபாட்டுத்தலங்களின் அருகே இருந்த 717 டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என உத்தரவிட்டார். அதேபோல மது பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கக்கூடாது. அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும். 21 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கக்கூடாது என்றும் கண்டிப்புடன் உத்தரவிட்டார். இதில் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்கும் விவகாரத்தில் மட்டும் அதிகாரிகள் உத்தரவை மதிக்கவில்லை.. பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் வாங்குவது தொடர்கிறது. அதேநேரம் மற்ற இரண்டு உத்தரவுகளும் தீவிரமாக பின்பற்றப்படுகிறது.
பேருந்து நிலையம், கல்வி நிலையம், கோயில், மசூதி, தேவாலயங்கள் அருகில் இருந்த மதுக்கடைகள் மூடப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் எளிதாக மது வாங்கியவர்கள், இப்போது மது வாங்க திண்டாடுகிறார்கள்..மது குடிக்க விரும்பும் பலரும், டாஸ்மாக் பக்கத்திலேயே இயங்கி வரும் தனியார் பார்களில், அதாவது மனமகிழ்மன்றங்களில் போய் மது வாங்கி குடிக்கிறார்கள்.
அப்படித்தான் மதுரை கோ.புதூர் பகுதியில் எப்.எல்.2 அனுமதி பெற்று ஒரு மனமகிழ்மன்றம் செயல்படுகிறது. அங்கு மதுபான விற்பனையும் நடக்கிறது. நேற்று காலை 11 மணி அளவில் அந்த மனமகிழ்மன்றத்தில் மது வாங்குவதற்கு ஏராளமான மது பிரியர்கள் கூட்டம் கூட்டமாக வந்தார்கள்.
அவர்களிடம் மது விற்பனையாளர்கள் திடீரென ஆதார் கார்டு இருந்தால் மட்டுமே மதுபானம் தரப்படும் என்று கூறியுள்ளார்களாம். இதனால் அங்கு விற்பனையாளர்களுக்கும், மது பிரியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் மனமகிழ் மன்றங்களில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்க வேண்டும் என்று விதி உள்ளது. அதனால் அங்கு மது அருந்த வருபவர்களிடம் ஆதார் அட்டை எண்களை பெற்று அவர்களை உறுப்பினர்களாக சேர்த்துள்ளார்களாம்.
இதனால் கையில் ஆதார் அட்டை வைத்திருந்த மதுபிரியர்கள் பலர், நீண்ட வரிசையில் காத்திருந்து ஆதார் அட்டையை காண்பித்து மதுபானங்களை வாங்கி சென்றனர். ஆதார் இல்லாதவர்கள் வேக வேகமாக தங்களின் வீட்டிற்கு சென்று ஆதார் அட்டையை எடுத்து வந்து காண்பித்து மது வாங்கி சென்றார்கள். அண்மையில் மனமகிழ்மன்றம் என்ற பெயரில் இயங்கும் எப்.எல்.2 அனுமதி பெற்ற மதுபானக்கூடங்களின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என்று குரல்கள் வலுத்து வருகின்றன. இது கடந்த ஆட்சியில் முறைகேடாக அனுமதி வழங்கப்பட்டதாககுற்றச்சாட்டுகளை கட்சிகள் எழுப்பி வருகின்றன. அதேபோல் விதிகளை மீறி செயல்படுவதாகவும் புகார்கள் உள்ளது. இந்த சூழலில் தான் மதுவாங்க ஆதார் கார்டு வேண்டும் என்று மனமகிழ் மன்றம் கேட்டதாக கூறப்படுகிறது.














Click it and Unblock the Notifications