நீதிபதி தினகரனின் நில ஆக்கரமிப்பு- 3 பேர் கொண்ட குழுவின் விசாரணை தொடக்கம்
சென்னை: கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தினகரன் மீதான நில ஆக்கிரமிப்பு தொடர்பாக, இந்திய சர்வே கழகத்தின் விசாரணை தொடங்கியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் காவேரிராஜபுரம் வந்த 3 பேர் கொண்ட அதிகாரிகள் குழு அங்குள்ள சர்ச்சைக்குரிய நிலத்தை முழுமையாக சர்வே செய்தது. நவீன ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் சர்வே பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டனர்.
இதுகுறித்து குழுவில் இடம் பெற்றுள்ளவர்களில் ஒருவரான தேசிய நிலப்பரப்பு புள்ளிவிவர அடிப்படைக் கட்டமைப்பு அமைப்பின் தலைமை செயலதிகாரி டாக்டர் சிவக்குமார் கூறுகையில், உண்மையில் என்ன நிலை காணப்படுகிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக இந்த ஆய்வு நடத்தப்படுகிறது. இதன் மூலம் சம்பந்தப்பட்ட நிலம் குறித்து இறுதியான முடிவுக்கு வர முடியும்.
காவேரிராஜபுரத்தில் உள்ள மொத்த நிலத்தையும் நாங்கள் சர்வே செய்யவுள்ளோம். இதற்கு கிட்டத்தட்ட 45 நாட்கள் பிடிக்கும். எங்களது ஆய்வு, விசாரணைகளுக்கு உதவும் என்றார்.
இந்தக் குழுவில், லக்னோ இந்திய சர்வே கழக உறுப்பினர் செயலாளர் சஞ்சய் குமார், தமிழ்நாடு, இந்திய சர்வே கழக இயக்குநர் தர்மராஜ் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் உத்தரவின் பேரில் இவர்கள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
199.5 ஏக்கர் புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு: கலெக்டர்
முன்னதாக இந்தக் குழுவினர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பழனிக்குமாரை சந்தித்து பேசினர். அப்போது அவர்களிடம் பழனிக்குமார் கூறுகையில், ஏற்கனவே நீதிபதி பி.டி.தினகரனின் நில ஆக்கிரமிப்பு குறித்து இருமுறை உச்சநீதிமன்ற காலேஜியத்திற்கு நான் அறிக்கை அனுப்பியுள்ளேன். அந்த அறிக்கையில் கூறியுள்ளதையே இப்போதும் வலியுறுத்துகிறேன்.
நீதிபதி பி.டி.தினகரன் கிட்டத்தட்ட 199.5 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளார் என்று கலெக்டர் பழனிக்குமார் உறுதிபடத் தெரிவித்தார்.
இதேபோல விழுப்புரம், நிலச் சீர்திருத்தத் துறை இணை ஆணையர் ஏ.பாலசுப்ரமணியும், கலெக்டர் கருத்தை உறுதி செய்யும் வகையிலான ஆதாரங்களை சர்வே குழுவினரிடம் சமர்ப்பித்தார்.
தினகரனின் மனைவி சந்திப்பு...
இதேபோல சர்வே குழுவினரை நீதிபதி தினகரனின் மனைவி வினோதினி தினகரன் தலைமையில் அவர் தரப்பு குழுவினரும் சந்தித்து தங்களது தரப்பு நியாயத்தை எடுத்து வைத்தனர்.
வினோதினி தலைமையிலான குழுவில் அவரது குடும்பத்தினர், அவர்களுக்கு ஆதரவான காவேரிராஜபுரம் கிராமத்தினர் சிலர், நண்பர்கள் என 17 பேர் இடம் பெற்றிருந்தனர்.
இரு தரப்பும் சமர்ப்பித்த ஆவணங்களை நாங்கள் பெற்றுள்ளோம். அதை வைத்து ஆய்வுகளை மேற்கொள்வோம். இவர்களில் யார் சொல்வது உண்மை என்பதை உரிய முறையில் ஆராய்வோம் என்றார் சிவக்குமார்.