சர்க்கரை முதல் முருங்கை வரை-மிரட்டும் விலைவாசி

நெல்லையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டவுன் மார்க்கெட், பாளை மார்க்கெட், நயினார்குளம் மொத்த மார்க்கெட்டுகளில் ஏராளமாக கிழங்குகள் இப்போதே குவியத் தொடங்கிவிட்டன.
பொங்கலுக்கு இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில் அதற்குள்ளாகவே காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் பண்டிகை பொருட்களின் விலை பொதுமக்களை மிரட்டும் வகையில் உள்ளது.
பருவநிலை மாற்றம், யூக பேர வணிகம், ஆன்-லைன் வர்த்தகம், ஆந்திர மாநில போக்குவரத்தில் பாதிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பொங்கலுக்கான பண்டிகை கால விலை உயர்வும் தற்போது சேர்ந்துகொண்டுள்ளது.
காய்கறிகள், சர்க்கரை, வெல்லம், பருப்புவகைகள், நெய் மட்டுமல்லாது பொங்கல் மண் பானைகளும் கூட விலை தலா ரூ.20 வரை விற்கும் என தெரிகிறது.
கடந்தாண்டு 48 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ பாசிப் பருப்பு தற்போது 90 ரூபாய்க்கு விற்கிறது. மண்டை வெல்லம் கடந்தாண்டு 280 ரூபாய்க்கு விற்றது, தற்போது 320 ரூபாய்க்கும், அச்சுவெல்லம் ஒரு கிலோ 350 ரூபாயில் இருந்து, 400 ரூபாய் வரையிலும் உயர்ந்துள்ளது.
நெய் விலை கடந்தாண்டை விட தற்போது சுமார் 30 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ 280 ரூபாய்க்கு விற்ற முந்திரி, இன்று 320 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. உலர் திராட்சை கிலோ 90 ரூபாயிலிருந்து 140 ரூபாய் வரையும், ஏலக்காய் கிலோ 800 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்கப்படுகிறது.
ஒரேயொரு முருங்கைக்காய் 8 ரூபாய்:
இத்துடன், காய்கறி விலையும் இப்போதே கிடுகிடுக்கத் துவங்கிவிட்டன. நெல்லை டவுன் மார்க்கெட், பாளை மார்க்கெட், நயினார்குளம் மொத்த மார்க்கெட்களில் இப்போதே கிழங்குகள் வரத்து அதிகமாக இருக்கிறது. கருணை கிழங்கு கிலோ ரூ.22க்கும், சேனை கிழங்கு 18க்கும், சிறு கிழங்கு 24க்கும், சேம்பு கிழங்கு ரூ.25க்கும் விற்கப்பட்டு வருகிறது.
மார்க்கெட்டில் தடியங்காய் மற்றும் பூசனிக்காயும் குவிந்து வருகிறது. இவை இரண்டும் கிலோ 3.50க்கு விற்கப்படுகிறது. இதனால் சில்லரை வியாபாரிகள் இவற்றை வாங்கி செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
முருங்கைக்காய் விலை பொதுமக்களை மிரட்டி வருகிறது. நேற்றைய நிலவரப்படி 1 முருங்கைக்காய் விலை ரூ.7 முதல் 8 வரை விற்கப்படுகிறது.
நெல்லை மார்க்கெட்டிக்கு முன்பு சாத்தான்குளம், உடன்குடி, திசையன்விளை பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும். ஆனால் கடந்த நவம்பர் மாதம் பெய்த கனமழையால் முருங்கை சாகுபடி உள்ளூர் பகுதிகளில் கடும் இழப்பை சந்தித்துள்ளது.
இதனால் பரோடாவில இருந்து நெல்லை மார்க்கெட்டுக்கு முருங்கைக்காய் கொண்டு வரப்படுகிறது. 1 கிலோ ரூ.60 முதல் 80 வரை சில்லரை வியாபாரிகளுக்கு வழங்கப்படுகிறது. இன்னும் ஒரு மாத காலத்திற்கு முருங்கைக்காய் விலை உயர்வை தவிர்க்க முடியாது என்கின்றனர் மொத்த வியாபாரிகள்.
சர்க்கரை கிலோ ரூ. 50யை தொடும்:
சர்க்கரை வரலாறு காணாத அளவுக்கு விலை உயர்ந்து சென்னையில் மூட்டை (100 கிலோ) ரூ. 3,800க்கு விற்பனையானது. அதாவது ஒரு கிலோ ரூ. 42. பொங்கலுக்குள் ஒரு கிலோ சர்க்கரை ரூ. 50ஐ தொட்டு விடும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு மே, ஜூன் மாதங்களில் ஒரு மூட்டை சர்க்கரை ரூ. 1,800க்கு தான் விற்பனையாகிக் கொண்டுருந்தது. கடந்த ஆண்டு கரும்பு விளைச்சல் குறைவாக இருந்ததால், சர்க்கரை பற்றாக்குறை ஏற்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதோடு நிறுத்திக்கொண்ட அரசு விளைச்சலை அதிகமாக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
இதன் விளைவாக, தனியார் ஆலைகள் மற்றும் பெரிய வியாபாரிகள் சர்க்கரையை அதிக அளவில் இருப்பு வைக்க ஆரம்பித்தனர். இதனால் சர்க்கரையின் விலை கடந்த செப்டம்பர் மாதத்தில் ரூ. 3,000ஐ எட்டிவிட்டது.
இதற்கிடையே, பிரேசிலில் சர்க்கரை உற்பத்தி குறைந்ததால் சர்வதேச சந்தையிலும் சர்க்கரையின் விலை பன்மடங்கு உயர்ந்தது.
இதன் எதிரொலியாக இந்தியாவில் இறக்குமதியாகும் சர்க்கரையும் விலை உயர்வை சந்தித்து வருகிறது.
சர்க்கரை தினமும் கிலோவுக்கு ஒரு ரூபாய் முதல் ரூ. 2 வரை விலை உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த 10 நாள்களில் ரூ. 400 அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications