Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேலுப்பிள்ளை உடல்-தமிழ் எம்பியிடம் தர மகள் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தந்தையார், திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் உடலை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. சிவாஜிலிங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என வேலுப்பிள்ளையின் மகள் கோரிக்கை விடுத்துள்ளார்.

ராணுவத்தின் பிடியில் இருந்து வந்த வேலுப்பி்ள்ளை நேற்று முன்தினம் இரவு காலமானதாக ராணுவம் கூறியுள்ளது.

வேலுப்பிள்ளையின் மனைவி பார்வதி அம்மாளின் நிலை தெரியவில்லை. அவரும் வயோதிகம் மற்றும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மோசமான நிலையில் இருந்து வருபவர்தான். தற்போது வேலுப்பிள்ளையின் திடீர் மரணத்தால், பார்வதி அம்மாளின் நிலை குறித்து உலகத் தமிழர்களின் மத்தியில் பெரும் கவலை எழுந்துள்ளது.

வேலுப்பிள்ளையின் மரணச் செய்தியை மட்டும் அறிவித்து விட்டு நின்று கொண்டுள்ளது இலங்கை அரசு. அவருடைய உடலை யாரிடம் ஒப்படைக்கப் போகிறார்கள், ஒப்படைப்பார்களா இல்லையா என்பது குறித்து இதுவரை இலங்கை அரசு எதையும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், தனது தந்தையின் உடலை, தமிழ் எம்.பி. சிவாஜிலிங்கத்திடம் ஒப்படைக்குமாறு கனடாவில் உள்ள வேலுப்பிள்ளையின் மகள் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிவாஜிலிங்கம் அதிபர் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சிவாஜிலிங்கம் கூறுகையில்,

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை காலமாகியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அவரது பூதவுடலை கனடாவிலுள்ள அவரது மகளிடமோ, டென்மார்க்கிலுள்ள அவரது மகனிடமோ அல்லது இந்தியாவிலுள்ள அவரது மகளிடமோ அனுப்புவது சாத்தியமற்றது.

இந்நிலையில் கனடாவிலுள்ள அவரது மகள் என்னைத் தொடர்பு கொண்டார். அவரிடம் நான் தெரிவித்தேன் கனடாவிலுள்ள இலங்கை துணை தூதரகத்தை தொடர்பு கொண்டு, இலங்கையிலுள்ள எமது உறவினர் சிவாஜிலிங்கத்திடம் பூதவுடலை கையளிக்குமாறும், இதற்கு நாம் அனுமதி தருவதாகவும் தெரிவிக்குமாறு கூறினேன்.

இதனையடுத்து துணைத் தூதரகம் விடுக்கும் அறிவுறுத்தலுக்கமைய, அரச தரப்புடன் கலந்தாலோசித்து அனுமதி பெற்று, நான் திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் ஈமக் காரியங்களை சொந்த ஊரானவல் வெட்டித்துறையில் நடத்துவேன்.

வேலுப்பி்ள்ளையின் மனைவி ஒரு பக்கவாத நோயாளி. எனவே அரசு அனுமதி வழங்கும் பட்சத்தில் அவரை இந்தியாவிலுள்ள அவரதி மகளிடம் அனுப்ப நடவடிக்கை எடுப்பேன்.

இந்தியா அனுமதி மறுக்குமாயின் கனடாவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பேன். அதுவரையில் அவர் கொழும்பில் தங்குவதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசுடன் பேசி ஏற்படுத்திக் கொடுப்பேன். இது குறித்து உரிய தரப்பு அதிகாரிகள், தூதுவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன்.

வேலுப்பிள்ளை இயற்கை மரணத்தை சந்தித்துள்ளார் என்று அரசு கூறினாலும் கூட பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அறிக்கை அளிக்கப்பட வேண்டும் என்றார் சிவாஜிலிங்கம்.

திருமாவளவன் அஞ்சலி

வேலுப்பிள்ளை மரணம் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

வேலுப்பிள்ளை அவர்கள் காலமாகிவிட்டார் என்கிற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளித்தது. ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்காக ஈடுஇணையற்ற மாவீரரை, மகத்தான தலைவரை ஈன்று புறம்தந்த பெருமைக்குரியவர் வேலுப்பிள்ளை அவர்கள்.

அவருடைய மரணம் இயற்கையானது என்று சொல்லப்பட்டாலும் அதுவும் ஒரு வீரச்சாவே ஆகும். தள்ளாத வயதிலும் தாய்மண்ணை விட்டுப் பிரியாமல் தமிழீழ விடுதலைப் புலிகள் களமாடும் வீரம் செறிந்த அந்த ஈழ மண்ணில் புலிகளுக்கு ஊக்கமளித்து வந்த ஒரு மாவீரராகவே அவர் வாழ்ந்தார்.

பிரபாகரன் அவர்களின் உணர்வுகளுக்கும் விடுதலைப் போராட்ட நடவடிக்கைகளுக்கும் இளம்பருவத்திலிருந்தே ஊக்கமளித்து வந்தவர் என்பதற்கு அவருடைய வாழ்க்கை ஒரு சாட்சியமாகவே விளங்குகிறது.

சிங்கள இனவெறியர்களின் வதைமுகாமில் சிக்கி தமது வாழ்வை நிறைவு செய்ததன் மூலம் ஈழ விடுதலைப் போராட்டத்தில் அவரும் ஒரு மகத்தான வரலாறாகப் பதிவாகியிருக்கிறார்.

ஈவிரக்கமற்ற இனவெறிக் கும்பல் பிரபாகரன் அவர்களின் வயது முதிர்ந்த தாய், தந்தை மற்றும் மாமியார் ஆகியோரையும் சிறையிலடைத்துக் கொடுமைப்படுத்தி வரும் நிலையில் இந்த மூவரையுமாவது விடுவிக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனாலும் சிங்கள ஆட்சியாளர்கள் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை என்பது பெரும் வேதனையளிக்கிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் குழுவோடு நான் இலங்கை சென்றிருந்த போதும், அண்மையில் மறைந்த அமைச்சர் சந்திரசேகர் அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கொழும்பு சென்றிருந்தபோதும், பசில் ராஜபக்சேவிடம் அந்த மூவரையும் விடுவிக்க வேண்டும் என முறையிட்டேன். அப்போது குடும்ப உறவினர்கள் விண்ணப்பித்தால் அவர்களை விடுவிக்க முடியும் என்று பசில் பதிலளித்தார்.

கனடாவில் உள்ள பிரபாகரன் அவர்களின் தமக்கையின் மூலமாக அம்முயற்சியை மேற்கொண்டிருந்த இவ்வேளையில் திடீரென வேலுப்பிள்ளை அவர்கள் காலமாகிவிட்டார் என்பதைத் தாங்கிக்கொள்ள இயலவில்லை.

வேலுப்பிள்ளை அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகளின் வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம். அவருடைய குடும்ப உறவினர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+