தூத்துக்குடி: ரூ.1.61 கோடி பொருட்கள் பறிமுதல்
தூத்துக்குடி: தூத்துக்குடி துறைமுகம் மூலம் வெளிநாட்டில் இருந்து முறைகேடாக இறக்குமதி செய்யப்பட்ட ரூ.1.61 கோடி அழகு சாதன பொருட்கள் உள்ளிட்டவற்றை சுங்க இலாகாவினர் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி துறைமுகத்தில் சட்டத்துக்கு புறம்பாக சில பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதாக சுங்க இலாகா கமிஷனர் ராஜனுக்கு தகவல் கிடைத்தது.
சுங்க இலாகா அதிகாரிகள் மும்பையை சேர்ந்த 'துஷார் இம்பெக்ஸ்' என்ற நிறுவனத்துக்காக சிங்கபூரில் இருந்து வந்த கன்டெய்னர்களை சோதனை செய்தனர்.
அதில் இறக்குமதி விதிகளுக்கு புறம்பாக அனுமதி பெறாமல் இறக்குமதி செய்யப்பட்ட அழகு சாதன பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவற்றை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.1.61 கோடியாகும்.
இதேபோல கடந்த 9ம் தேதியன்று கன்னூரே சேர்ந்த 'பிரின்ஸ் ஸ்டீல்ஸ்' என்ற நிறுவனத்திற்காக துபாயில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உலோக உருக்கு கழிவுகள் வந்த 8 கன்டெய்னர்களை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அவற்றில் இரும்பு ராடுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.43 லட்சமாகும். மேலும் டெல்லியை சேர்ந்த இரு நிறுவனங்கள் தூத்துக்குடி துறைமுகம் வழியாக துபாய்க்கு பெண்கள் அணியும் 'ஸ்கார்ஃப்'கள் என்ற பெயரில் தரம் குறைந்த துணிகளை அனுப்ப முயன்றதை கண்டுபிடித்தனர்.
இதன் மதிப்பு ரூ.2.50 கோடி என தவறாக மதிப்பீட்டு அதற்காக தவறான உறுதிமொழி படிவம் தாக்கல் செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. ஆனால் இதன் உண்மையான மதிப்பு ரூ.68 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் அரசிடம் இருந்து பெறப்படும் ரூ.27 லட்சம் ஏற்றுமதி மானியம் விரயமாவது தடுத்து நிறுத்தப்பட்டது. இதில் தொடர்புடைய நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.1.60 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications