14 போலி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள்! - ஆசாத் தகவல்

போலி மருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்கள் குறித்து தகவல் தரும் நபர்களுக்கு ரூ.25 லட்சம் வரை பரிசளிக்கப்படும் என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.
இந்த அறிவிப்பு வெளியான பிறகு, இதுவரை 14 போலி நிறுவனங்கள் பற்றிய தகவல்களை பல்வேறு தரப்பினர் தெரிவித்துள்ளதாக, டெல்லியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஆசாத் குறிப்பிட்டார்.
இந்த 14 போலி மருந்து தயாரிப்பு நிறுவனங்களிலும் சோதனை நடத்தி, அவை தயாரிக்கும் போலி மருந்துகளை பறிமுதல் செய்யவும் அவர்களைக் கைது செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்தப் போலி நிறுவனங்கள் எந்தெந்த மாநிலங்களில் செயல்படுகின்றன என்பதை இப்போதைக்கு தெரிவிக்க முடியாது என்று கூறிவிட்ட அமைச்சர், "ஆய்வின் முடிவில் குறிப்பிட்ட நிறுவனத்தின் மருந்துகள் போலி என்பது உறுதி செய்யப்பட்டால், அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கு அதிகபட்சம் ஆயுள் தண்டனை வழங்க சட்டத்தில் இடம் இருக்கிறது" என்றார்.
பொதுத்துறை மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து...
ஆசாத் மேலும் கூறுகையில், "தடுப்பு மருந்துகள் தயாரித்து வந்த பொதுத் துறை நிறுவனங்களான சென்னை கிண்டியில் உள்ள பி.சி.ஜி. வாக்ஸின் நிறுவனம், குன்னூரில் உள்ள பாஸ்டர் இந்தியா நிறுவனம், கசோலியில் உள்ள மத்திய ஆய்வு நிறுவனம் இவை மூன்றும் தரமான உற்பத்தி முறைகளைக் கையாளவில்லை என்ற காரணத்தால் அவற்றின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
எனினும் குறைபாடுகளைக் களைந்து இந்த மூன்று நிறுவனங்களையும் மீண்டும் செயல்பட வைக்கும் பணியில் சுகாதாரத் துறை ஈடுபட்டுள்ளது.
கிண்டி பிசிஜி வாக்ஸின் நிறுவனத்தைப் பொருத்தவரை, இதனை ஏன் மூடினார்கள் என்று கண்டறிய அமைக்கப்பட்ட ஜாவீத் சவுத்ரி கமிட்டியின் அறிக்கை கிடைத்ததும் இது மீண்டும் திறக்கப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications