உ.பி: அமளியுடன் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடர்
லக்னோ: உத்தரப் பிரதேச சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பெரும் அமளியுடன் இன்று தொடங்கியது.
சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்கட்சியினர் ஆளுநர் உரை புத்தகங்களை கிழித்து ஆளுநர் பி.எல்.ஜோஷி மீது வீசினர்.
கூட்டத்தொடரின் தொடக்கமாக காலை ஆளுநர் தனது உரையை வாசிக்கத்தொடங்கினார். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பெரும் அமளியில் ஈடுபட்டனர்.
அவை நடவடிக்கைகள் தொடங்கும் போதே, எதிர்க்கட்சிகள் அரசுக்கெதிரான கோஷங்களை எழுப்பின.
விலைவாசி உயர்வு, ஊழல் மற்றும் எம்.எல்.சி தேர்தலில் முறைகேடு என பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக அரசுக்கு எதிரான கோஷங்களை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பினர்.
இதனால் ஆளுநர் உரையின் போது உறுப்பினர்கள் அதிகளவில் குறுக்கீடுகள் செய்தனர். பல உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து கோஷமிட்டு ஆளுநர் உரைக்கு இடைஞல் செய்தனர்.
சமாஜ்வாடி உள்ளிட்ட எதிர் கட்சியினர் கோஷமிட்டதை பொருட்படுத்தாமல் ஆளுநர் பி.எல்.ஜோஷி உரையை வாசித்துக் கொண்டிருந்தார்.
இதனால் கோபம் அடைந்த எம்.எல்.ஏ.க்கள் தங்கள் கையில் இருந்த பேப்பர்கள் மற்றும் கவர்னர் உரை புத்தகங்களை கிழித்து ஆளுநர் மீது வீசினார்கள்.
இதற்கு பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சபையில் பெரும் அமளி ஏற்பட்டது.
இதனால், ஆளுநர் பி.எல்.ஜோஷி ஓரிரு வரிகளை மட்டும் வாசித்து விட்டு உரையை பாதியிலேயே முடித்துக்கொண்டு அவையை விட்டு புறப்பட்டார்.
பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்நாள் கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications