யாழ்ப்பாணத்தில் 32% தமிழர்களுக்கே வாக்கு அட்டை
கொழும்பு: அதிபர் தேர்தலில் வாக்களிக்க இதுவரை யாழ்ப்பாணத்தில் வெறும் 32 சதவீதம் பேருக்கு மட்டுமே வாக்கு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளனவாம்.
தமிழர்கள் மட்டுமே பெருமளவில் வசிக்கும் முக்கியப் பகுதி யாழ்ப்பாணம். ஆனால் இங்கு இதுவரை 32 சதவீதம் பேருக்கு மட்டுமே வாக்களிக்கும் அட்டை தரப்பட்டுள்ளதாம்.
யாழ்ப்பாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 7,21,389. இவர்களில் கடந்த 16-ம் தேதி வரை 2,30,761 பேர் மட்டுமே வாக்கு அட்டையைப் பெற்றுள்ளனர்.
எஞ்சியவர்களின் நிலை குறித்து யாழ்ப்பாண மாவட்ட உதவி தேர்தல் ஆணையர் பி.குகநாதன் கூறுகையில்,பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் சிலர் இலங்கையை விட்டு வெளியேறியிருக்கலாம் அல்லது அகதிகளாக முகாம்களில் தங்கியிருக்கலாம்.
இருப்பினும் வாக்கு அட்டை கட்டாயம் கிடையாது. இதுவரை அதைப் பெறாதவர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டையை காண்பித்து வாக்களிக்கலாம் என்றார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற யாழ்ப்பாண மாநகராட்சி கவுன்சில் தேர்தலிலும் இதே பிரச்னை எழுந்தது. அப்போது பதிவு செய்யப்பட்ட 1,05,000 பேரில், வெறும் 50 ஆயிரம் பேருக்கு மட்டும்தான் வாக்கு அட்டை வழங்கப்பட்டது.
போருக்குப் பிறகு அகதி முகாம்களில் தங்கியுள்ள 2.7 லட்சம் தமிழர்களில் வெறும் 13 ஆயிரம் பேர் மட்டுமே பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களாக உள்ளனர்.
அகதி முகாம்களில் உள்ள தமிழர்கள் தங்கள் ஜீவாதார பிரச்னையை பற்றி சிந்தித்துக்கொண்டிருப்பதால் அதிபர் தேர்தலைப் பற்றி கவலை கொள்ளவில்லை. யார் வந்து பொறுப்பேற்றாலும் தங்களுக்கு விமோசனம் கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று எண்ணுவதால் அதிபர் தேர்தலை பற்றிய நினைப்பே இல்லாமல் உள்ளனர்.
அடிப்படைத் தேவைகளான உணவு, குடிநீர், சுகாதார வசதி, இருப்பிடம் உள்ளிட்டவைகளுக்கு மத்தியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் வேளையில் தாங்கள் எப்போது தங்கள் இருப்பிடங்களுக்கு செல்வோம் என்ற ஒரே சிந்தனையில்தான் அவர்கள் உள்ளனர்.
அகதிகளிடம் இதுவரை யாரும் ஆதரவு கோரவில்லை: தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், அதிபர் தேர்தலில் போட்டியிடும் 22 வேட்பாளர்களில் ராஜபக்சேவைத் வேறு யாருமே அகதிகளிடம் ஆதரவு கோரி வரவே இல்லை.
பொன்சேகாவை ஆதரிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் கூட இந்தப் பக்கம் எட்டிக் கூடப்
பார்க்கவில்லையாம்.
இதற்கிடையே தமிழர் வாக்குகளை பெரிதும் நம்பி சுயேச்சையாக களம் இறங்கியுள்ள சிவாஜிலிங்கம் தமிழர்களின் வாக்குகளைக் கணிசமாக பிரிக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.
தமிழர்களின் வாக்குகள் பொன்சேகாவுக்குப் போகாமல் ஓரளவுக்கு சிவாஜிலிங்கம் வாக்குகளைப் பிரித்தாலும் கூட அது ராஜபக்சேவுக்கு சாதகமாக மாறி விடக் கூடிய அபாயம் உள்ளதாக கருதப்படுகிறது.
5 தமிழ் மருத்தவர்கள் விடுதலை:
இந் நிலையில் இலங்கையில் நடந்த போரின் போது வன்னியில் மக்களுக்கு சிகிச்சை அளித்த அரசு மருத்தவர்கள் 5 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
போர் நடந்தபோது ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் வன்னியில் முள்ளிவாய்கால் மக்களுக்கு மருத்துவம் செய்ததற்காக அரசு மருத்துவர்கள் சத்தியமூர்த்தி, வரதராஜா, சண்முகராஜா, இளஞ்செளியன், வல்லவன் மற்றும் மருத்துவ உதவியாளர் கோதீஸ்வரன் ஆகியோர் ராணுத்தினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பின்னர் நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இந் நிலையில், நேற்று இவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிற்கு போதிய ஆதாரங்கள் முன் வைக்கவில்லை என்ற காரணத்தினால் கொழும்பு உயர்நீதிமன்றம் இவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்து விடுதலை செய்துவிட்டது.
16 தமிழ் இளைஞர்கள் விடுதலை:
அதே போல பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 16 தமிழ் இளைஞர்களை கொழும்பு நீதிமன்றம் விடுவித்துள்ளது.
விடுதலைப் புலிகள் தங்க இடவசதிகளை செய்து கொடுத்ததாகக் கூறி 49 தமிழ் இளைஞர்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கொழும்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது இவர்களில் 16 பேரை விடுவிப்பதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என காவல் துறை தெரிவித்ததையடுத்து அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
மேலும் 18 தமிழ் இளைஞர்களை வெலிகந்தவிலுள்ள புனர்வாழ்வு தடுப்பு முகாமுக்கு அனுப்புமாறும், மற்ற 15 இளைஞர்களையும் தொடர்ந்து சிறையில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications