சென்னையில் காந்தி சிலை சேதம்-தங்கபாலு கண்டனம்
சென்னை: சென்னை அருகே மகாதமா காந்தி சிலை தகர்த்து சேதப்படுத்தப்பட்ட செயலுக்கு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தேசப்பிதா அண்ணல் மகாத்மா காந்திஜி திருவுருவச்சிலை திருவொற்றியூரில் நேற்று சேதப்படுத்தப்பட்டுள்ளது. இக்கொடியச் செயலுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
குடியரசு கொண்டாட்ட நாளான நேற்று அதற்காகவே தன் உடல், பொருள், ஆவி அத்தனையும் தியாகம் செய்த தேசப்பிதாவின் திருவுருவச் சிலை மக்கள் நடமாட்டம் மிகுந்த அந்நகரின் காலடிப்பேட்டை மார்க்கெட் அருகிலேயே களங்கப்படுத்தப்பட்டுள்ளது.
அதைக் கண்டதும் கொதித்தெழுந்த ஏராளமான காங்கிரஸ் சகோதர, சகோதரிகள் திருவொற்றியூர் நகர காங்கிரஸ் தலைவர் சுகுமார் தலைமையில் திரண்டனர். அண்ணலின் திருவுருவச் சிலையை ஊனப்படுத்திய சமூக விரோதிகளை உடனே கண்டுபிடித்து சிறையிலடைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தவாறு மறியலில் ஈடுபட்டனர்.
இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மனக் கொதிப்போடு பொறுமை காத்து வரும் காங்கிரஸ் சகோதர, சகோதரிகள் மத்தியில் அமைதியின்மை நிலவுகிறது.
எனவே காவல்துறையினர் காலதாமதமின்றி தேசப்பிதாவின் திருவுருவச் சிலையை ஊனப்படுத்திய சமூக விரோதிகளை கண்டு பிடித்து தண்டிக்க வேண்டும்.
ஏற்கனவே இது போன்று தேசத் தலைவர்களின் திருவுருவப்படங்கள், சிலைகள் களங்கப்படுத்தப்பட்டு வந்துள்ளன. இனியும் தேச விரோதச் செயலுக்குரிய இக்குற்றம் தொடரா வண்ணம் காவல்துறை முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications