ஐபிஎல் போட்டிகளில் எங்கள் வீரர்கள் விளையாட மாட்டார்கள் - பாக். கிரிக்கெட் வாரியம்
மும்பை: இந்தியன் பிரிமீயர் லீக் எனப்படும் ஐபிஎல் போட்டிகளில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாட மாட்டார்கள். இதுதொடர்பாக 11 வீரர்களுக்கு கொடுக்கப்பட்ட ஆட்சேபனை இல்லை சான்றிதழ் ரத்து செய்யப்பட்டு விட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் இஜாஸ் பட் தெரிவித்துள்ளார்.
கடந்த பத்து நாட்களுக்கு முன்பு நடந்த 3வது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலத்தின்போது பாகிஸ்தான் வீரர்கள் முற்றாக நிராகரிக்கப்பட்டு விட்டனர். இதனால் பாகிஸ்தான் அரசும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும், வீரர்களும், இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஐபிஎல் நிர்வாகத்தின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்தன. மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் ஐபிஎல்லின் போக்கை கடுமையாக சாடினார். இது கிரிக்கெட்டுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்றும் அவர் வர்ணித்தார்.
அதேபோல கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரான ஷாருக் கானும் ஐபிஎல் போக்கைக் கண்டித்திருந்தார்.
தாறுமாறாக வந்த விமர்சனங்களால் நெளிந்த ஐபிஎல் கமிஷனர் லலித் மோடி, பாகிஸ்தான் வீரர்களை அணிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.
ஆனால் தற்போது தங்களது வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வாரியத் தலைவர் இஜாஸ் பட் கூறுகையில், அனைத்து 11 வீரர்களுக்கும் வழங்கப்பட்ட ஆட்சேபனை இல்லை சான்றிதழ் ரத்து செய்யப்பட்டு விட்டது. ஐபிஎல் போட்டிகளில் எங்களது வீரர்கள் விளையாட மாட்டார்கள். ஐபிஎல் முறையாக நடக்கும் வரை விளையாடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. முற்றுப்புள்ளி வைத்து விட்டோம்.
முதலில் எங்களது வீரர்களை ஏலம் எடுக்காமல் அவமானப்படுத்தினர். பின்னர் அப்துல் ரஸ்ஸாக் குறித்து குழப்பமான தகவல்களை வெளியிட்டனர். இப்போது எந்த வீரராவது காயமடைந்தால் அவர்களுக்குப் பதில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாடலாம் என்கிறார்கள்.
நாங்கள் விளையாடவே கூடாது என்று ஐபிஎல் விரும்புகிறது என கருதுகிறோம். 11 வீரர்களையும் சப்ஸ்டிடியூட்டாக அனுப்பி அவர்களில் ஒருவர் மட்டும் விளையாட மற்றவர்கள் வேடிக்கை பார்க்கும்படி நேர்ந்தால் அது மற்ற வீரர்களுக்கு மிகவும் அவமானமாகும்.
ஐபிஎல்லுடன் எங்களது உறவு மேம்பட்டால் மட்டுமே இனி எங்களது வீரர்களை விளையாட அனுமதிப்போம் என்றார் பட்.
அப்துல் ரஸ்ஸாக்கை எந்த ஐபிஎல் அணியாவது விளையாட அழைத்துள்ளதா என்று கேட்டபோது, இல்லை, நாங்கள் ரஸ்ஸாக்கை அனுப்ப மாட்டோம். ஐபிஎல்லுக்காக எங்களது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்றார் பட்.












Click it and Unblock the Notifications