சென்னையில் மேலும் ஒரு பண மோசடி - மக்கள் தவிப்பு - புகார்
சென்னை: சென்னையில் மீண்டும் பண மோசடிகள் தலை விரித்தாடத் தொடங்கியுள்ளன. பணத்தை முதலீடு செய்தால் 5 மடங்கு பணம் தருவதாக கூறி ஒரு நிறுவனம் லட்சக்கணக்கில் மோசடி செய்து விட்டதாக புதிய புகார் கிளம்பியுள்ளது.
சமீபத்தில் மிகப் பெரிய அளவில் மோசடி செய்த ஜேபிஜே ரியல் எஸ்டேட் நிறுவனம் போலீஸ் வலையில் சிக்கியது. இந்த நிலையில் பணம் முதலீடு செய்தால் அதை விட 5 மடங்கு பணம் தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்த இன்னொரு நிறுவனம் சிக்கியுள்ளது.
எழும்பூர் மாண்டியத் சாலையில், எம்.எல்.சி. என்ற பங்கு முதலீட்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் தங்களிடம் ரூ. ஒன்றரை லட்சம் கட்டினால் ஒவ்வொரு மாதமும் ரூ.10 ஆயிரத்து 178 வீதம் 60 மாதங்கள் வரை திருப்பித் தருவோம் என்று பத்திரிகைகளில் கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்தது.
இதை உண்மை என நம்பி கொளத்தூர் 2-வது தெருவை சேர்ந்த சீனிவாசன், அவரது மனைவி கனகவல்லி, பாலகுரு, ராதாகிருஷ்ணன் ஆகியோர் ரூ.1 1/2 லட்சம் கட்டினர். அப்போது அந்நிறுவனம் ஒவ்வொரு மாதமும் கொடுக்க வேண்டிய செக்குகளை முன்கூட்டியே அவர்களுக்கு வழங்கியது.
இதனால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். தாங்கள் கட்டிய பணத்திற்கு 5 மடங்கு திருப்பி கிடைத்து விட்டதாக கருதி குஷியாக இருந்தனர். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் செக்கை வங்கியில் செலுத்திய போது எம்.எல்.சி. நிறுவன கணக்கில் பணம் இல்லாமல் திரும்பி வந்தது.
இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அவர்கள் போலீசில் புகார் செய்தனர். அவர்கள் அளித்த புகாரில் 100-க்கும் மேற்பட்ட மக்களிடம் 5 மடங்கு பணம் தருவதாக கூறி எம்.எல்.சி. நிறுவனம் லட்சக்கணக்கில் மோசடி செய்திருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மோசடி நிறுவனத்தின் தலைமை அலுவலகம் டெல்லியில் உள்ளதாம். இந்த நிறுவன மோசடி குறித்து போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications