எல்லாப் போராட்டத்தையும் முடித்து விட்டு கொசுவிடம் வந்துள்ளார் ஜெ. -ஸ்டாலின்
சென்னை: எல்லாப் போராட்டத்தையும் நடத்தி ஓய்ந்து விட்டு தற்போது கொசு ஒழிப்புப் போராட்டத்திற்கு வந்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்று கிண்டலடித்துள்ளார் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்.
கூவம் சீரமைப்பு பணிகளை பார்வையிட வந்த மு.க.ஸ்டாலினிடம் கொசு ஒழிப்பு போராட்டம் நடத்தப்போவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளது பற்றி செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு அவர் பதிலளிக்கையில்,
முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா கொசு ஒழிப்புப் போராட்டம் அறிவித்து நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். கொசு ஒழிப்புப் பணிகளுக்காக முதல் முறையாக நீர் நிலைகளில் கொசுப் பெருக்கத்தை தடுப்பதற்காக 9 படகுகள் மூலம் நாள்தோறும் கொசு மருந்து அடிக்கப்பட்டு, கொசு உற்பத்தியாகும் லார்வா நிலையிலேயே அழிக்கப்படுகிறது.
சென்னையில் கொசு ஒழிப்பு பணிகளுக்காக அரசு, மாநகராட்சி, தனியார் பள்ளிகளை சேர்ந்த 5 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு முதல் முறையாக சுகாதாரத் தூதுவர் அட்டைகள் வழங்கி கொசு ஒழிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
நாள்தோறும் 1200 மாநகராட்சி தொழிலாளர்களை கொண்டு கொசு ஒழிக்கும் புகை மருந்துகள் அடிக்கப்படுகிறது. 260 கைத் தெளிப்பான்கள், 100 கை புகை பரப்பிகள், 30 வாகன புகை பரப்பிகள் மூலம் நாள் தோறும் காலையிலும், மாலையிலும் புகை மருந்து அடிக்கப்பட்டு, கொசு ஒழிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
எல்லாப் போராட்டங்களையும் நடத்தி விட்டு, ஜெயலலிதா கடைசியாக கொசு ஒழிப்புப் போராட்டத்திற்கு வந்துள்ளார் என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications