நவம்பரில் தொடங்கும் ராஜபக்சேவின் புது பதவி காலம்!
கொழும்பு:சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் இரண்டாம் முறையாக வெற்றி பெற்றுள்ள ராஜபக்சே, புதிய அதிபராக வரும் நவம்பரில் பதவியேற்க வேண்டும் என்று இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்புபளித்துள்ளது.
அவரது இற்போதைய பதவிக்காலம் 2011ம் ஆண்டு நவம்பரில் முடிகிறது. இலங்கை அதிபரின் பதவிக்காலம் 6 ஆண்டுகள். பதவியேற்று 4 ஆண்டு பூர்த்தி செய்தால் மறு தேர்தலுக்கு உத்தரவிட அதிபருக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது.
தற்போதைய பதவி முடிய இன்னும் 2 ஆண்டுகள் இருக்கும் நிலையில் முன்கூட்டியே தேர்தலை அறிவித்து அதில் வெற்றி பெற்றார் அதிபர் ராஜபக்சே.
புதிய பதவி காலத்தை உடனடியாக தொடங்கவேண்டுமா அல்லது இப்போதைய பதவிக்காலம் 5 ஆண்டு முடியக் கூடிய நவம்பர் 2010ல் தொடங்கலாமா என்று கேட்டு உச்ச நீதிமன்றத்தை ராஜபக்சே அணுகினார்.
அவரது மனுவை விசாரித்த நீதிபதிகள் வரும் நவம்பர் 19ம் தேதியிலிருந்து இரு வாரத்துக்குள் புதிய அதிபராக ராஜபட்ச பதவியேற்கலாம் என்று தீர்ப்பளித்தனர்.
அவர் எப்போது பதவியேற்கிறாரோ அப்போதிலிருந்து அதிபரின் புதிய பதவி காலம் தொடங்கும். அவர் அடுத்த 6 ஆண்டுகள் பதவி வகிக்கலாம்.
மட்டக்களப்பு பெண் மேயருக்கு கருணா கோஷ்டி மிரட்டல்:
கொழும்பு மட்டக்களப்பு மேயராக உள்ள சிவகீதா பிரபாகரனுக்கு கருணா கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு துரோகம் இழைத்து அரசுப் படையினருடன் இணைந்து புலிகள் இயக்கத்தை உடைத்தவர் கருணா.
இவர் விலகிச் சென்று புலிகளின் ரகசியங்களைக் காட்டிக் கொடுக்க ஆரம்பித்த பின்னர்தான் புலிகள் இயக்கத்திற்கு எதிரான ராணுவ நடவடிக்கைள் பலம் பெறத் தொடங்கின.
இந்த நிலையில் அதிபர் தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்த மட்டக்களப்பு மாநகர மேயர் சிவகீதா பிரபாகரனுக்கு கருணா கோஷ்டியினர் மிரட்டல் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே அவரது வீட்டை கருணா கோஷ்டியினர் தாக்கினர். இந்த நிலையில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
11 ஆயிரம் தமிழ் இளைஞர்கள் மாயம்:
இந்த நிலையில், ராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்ட 11 ஆயிரம் தமிழ் இளைஞர்களின் நிலை குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து தகவல் தெரிவிக்க இலங்கை அரசு மறுத்து வருகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பான மனித உரிமை கண்காணிப்பகம் இதுகுறித்துக் கூறுகையில்,
11 ஆயிரம் தமிழ் இளைஞர்களை நீண்ட நாள்களாக மோசமான சிறைகளில் அடைத்து துன்புறுத்தி வருகிறது இலங்கை ராணுவம்.
அவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது அந்த இயக்கத்தோடு தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள்.
ரகசிய சிறைகளில் அடைக்கப்பட்டு அவர்களைப் பற்றி விவரங்களும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. இந்த விஷயத்தில் இலங்கை அரசு எல்லாவற்றையும் மூடி மறைப்பதால் அவர்களின் கதி குறித்து பெரும் கவலை ஏற்பட்டுள்ளது என்று அமைப்பின் ஆசிய இயக்குநர் பிராட் ஆதம்ஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக 30 பக்க அறிக்கையை அந்த அமைப்பு வாஷிங்டனில் வெளியிட்டுள்ளது. மனித உரிமை ஆர்வலர்கள், மனித உரிமை அமைப்பின் ஊழியர்கள், சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளைஞர்களின் உறவினர்கள் ஆகியோர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகளை மீறுவதை இலங்கை அரசு வாடிக்கையாகவே கொண்டுள்ளது. குறிப்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களின் அடிப்படை உரிமைகள் முற்றிலுமாக நிராகரிக்கப்படுகின்றன. அவர்கள் கொடூரமாக துன்புறுத்தப்பட்டு வருவதாக பரவலாக புகார் உள்ளது.
அவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ள இடத்தில் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. அவர்களில் பலரைக் காணவில்லை. அவர்களது கதி என்ன என்பது மர்மமாக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று காணாமல் போனவர்கள் ரகசிய இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் தமிழர் அமைப்புகள் அச்சம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இதுதொடர்பாக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தாலும் கூட அதை கொஞ்சம் கூட சட்டையே செய்யாமல் தொடர்ந்து அலட்சியமாக நடந்து வருகிறது இலங்கை அரசு என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications