சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்டது எண்டேவர் விண்கலம்
வாஷிங்டன்: விண்வெளியில் உருவாக்கப்பட்டு வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு ஐந்து விஞ்ஞானிகளுடன் அமெரிக்காவின் எண்டேவர் விண்கலம் புளோரிடாவில் இருந்து புறப்பட்டு சென்றது.
புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி திங்கள் கிழமை அதிகாலை 4.14 மணிக்கு எண்டேவர் விண்கலம் விண்ணை நோக்கி சீறிப் பாய்ந்து புறப்பட்டது.
திட்டமிட்ட நேரத்தை விட 24 மணி நேரம் தாமதமாக எண்டேவர் புறப்பட்டுள்ளது. 13 நாள் பயணமாக விண்வெளிக்கு சென்றுள்ள இந்த விண்கலம் இருளில் செலுத்தப்படுவது இதுவே கடைசி முறை.
நாசா மற்றும் சர்வதேச நாடுகளின் சார்பில் விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம் கட்டமைக்கப்பட்டு வருகிறது.
வரும் செப்டம்பர் மாதத்தில் இந்த ஆராய்ச்சி மையம் முழுவதுமாக கட்டமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான கட்டமைப்பு உபகரணங்கள், பல்வேறு சாதனங்கள் உள்ளிட்டவை பூமியில் இருந்து இந்த எண்டேவர் விண்கலத்தின் மூலமே எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றன.
தற்போது விண்வெளி நிலையத்தில் அமைக்க வேண்டிய மனித பயன்பாட்டு அறை மற்றும் பூமிக் காட்சி திரை போன்ற சுமார் 400 மில்லியன் டாலர் மதிப்புள்ள பல்வேறு உபகரணங்களை எண்டேவர் விண்கலம் சுமந்துச் செல்கிறது.
இவற்றை விண்வெளி நிலையத்தில் பொருத்திய பின்னர் நிலைய கட்டமைப்பு பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்து விடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இன்னும் நான்கு பயணத்திட்டம் மட்டுமே விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்காக திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பிறகு முழுமையாக மனிதர்கள் தங்கி இருக்கக் கூடிய அளவுக்கு விண்வெளி ஆராய்ச்சி நிலையம் தயாராகி விடும்.
வரும் மார்ச், மே, ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் மேற்கொள்ளப்படும் நான்கு பயணங்களும் பகல் நேரத்தில் புறப்பாடு இருக்கும் வகையிலேயே திட்டமிடப்பட்டுள்ளது. கடைசி முறையாக இருள் வானில் இன்று எண்டேவர் புறப்பட்டுள்ளது.
வரும் புதன் கிழமை அன்று எண்டேவர் விண்கலம் விண்ணில் உள்ள சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை சென்றடையும். விண்கலத்தின் கமாண்டர் ஜார்ஜ் ஸாம்கா தலைமையில் 4 விஞ்ஞானிகள் இந்த பயணத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications