மாவோயிஸ்டுகள் மீண்டும் அட்டகாசம்: சரக்கு ரயில் தடம் புரண்டது
ரூர்கேலா(ஒரிசா): ஹவுரா-மும்பை இடையிலான ரயில் பாதையில் மாவோயிஸ்டுகள் தண்டவாளத்தை தகர்த்ததால், சரக்கு ரயில் தடம் புரண்டது.
இதனால் அந்த தடத்தில் இன்று காலை முதல் பல ரயில்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ஒரிசா மாநிலத்தின் ரூர்கேலா ரயில் நிலையத்துக்கு அருகே சுமார் 30 கி.மீ தொலைவில் பலூலாட்டா மற்றும் ஜாரெய்கேலா ஆகிய ஊர்களுக்கு இடையே ரயில் தண்டவாளத்தை மாவோயிஸ்டுகள் வெடி வைத்து தகர்த்தனர்.
நள்ளிரவில் சுமார் 1 மணியளவில் இந்த சம்பவம் நடத்ததாக தெரிகிறது. இதுபற்றி தெரியாமல் அந்த தடத்தில் வந்த சரக்கு ரயில், தடம் புரண்டு சாய்ந்தது.
இதில் சரக்கு ரயிலின் இரண்டு பெட்டிகள் சரிந்தன. எனினும் இந்த சம்பவத்தில் ஊழியர் அல்லது மற்றவர்களுக்கு காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை.
இதன் காரணமாக ஹவிரா மும்பை இடையிலான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதே போல மற்ற தடங்களிலும் தண்டவாளத்தை மாவோயிஸ்டுகள் தகர்த்திருக்கிறார்களா என தீவிர சோதனைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன.
பீகார், ஜார்க்கண்ட், ஒரிசா மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்கள் தங்களுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை மேற்கொள்வதை எதிர்த்து மாவோயிஸ்டுகள் நடத்தி வரும் இந்த பந்த் காரணமாக நேற்று பீகாரில் தண்டவாளம் தகர்க்கப்பட்டு ஒருவர் பலியானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications