சூப் கடை வைத்திருந்து ரவுடியாக மாறி வீழ்ந்த திண்டுக்கல் பாண்டியன்
சென்னை: சூப் கடை நடத்தி வந்து பின்னர் ரவுடியாக மாறி கடைசியில் போலீஸாரின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகியுள்ளார் பிரபல ரவுடி திண்டுக்கல் பாண்டியன்.
சென்னை அருகே பனையூர் பகுதியில் வைத்து நேற்று போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார் பாண்டியன். இவருடன் இருந்த கூட்டாளி கூடுவாஞ்சேரி வேலுவும் போலீஸின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையானான்.
திண்டுக்கல் பாண்டியன் சாதாரண சூப் கடை உரிமையாளராக இருந்த நபர். பின்னர் ரவுடித்தனத்தில் குதித்து தமிழகம் முழுவதும் தனது கைவரிசையைக் காட்டி கடைசியில் சென்னையில் வந்து உயிரை இழந்துள்ளார்.
பாண்டியன் ஆரம்பத்தில் திண்டுகல்லில் தான் பிரபலம். திண்டுக்கல் டவுனில் ஆட்டுகால் சூப் கடை நடத்தி வந்தார். இதனால் இவரை சூப் பாண்டியன் என்று இவரது நண்பர்கள் அழைப்பார்கள். பாண்டி கடை சூப்' என்றால் திண்டுகல்லில் ரொம்பப் பிரபலம்.
முதன் முதலாக ..
1998-ம் ஆண்டு திண்டுக்கல் பாண்டியன் முதன் முதலாக பட்டா கத்தியை தூக்கினார். கத்தியை எடுத்து விட்டால் தலையை வெட்டாமல் கீழே வைக்க மாட்டாராம்.
அப்போது கரடி மணி என்ற இன்னொரு ரவுடி திண்டுக்கலில் பிரபலமாக இருந்த நேரம். இவரும், பாண்டியனும் கூட்டாளிகளாக இருந்தனர். பின்னர் எதிரும் புதிருமாக மாறினர்.
1998-ம் ஆண்டு கரடி மணியின் கூட்டாளி சீசர் மணி என்பவரை திண்டுக்கல் பாண்டியன் முதல் முதலாக வெட்டி சாய்த்தார். திண்டுக்கல் டவுன் போலீசார் முதல் முதலாக திண்டுக்கல் பாண்டியன் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர்.
அடுத்து 1999-ல் சீட்டிங் ஆனந்த் என்பவரைக் கொலை செய்தார். அதே ஆண்டில் கரடி மணியின் இன்னொரு கூட்டாளியான ஆட்டோ டிரைவர் ஸ்ரீதரை கொலை செய்தார் பாண்டியன்.
அதே ஆண்டு கரடி மணியின் இன்னொரு கூட்டாளியான செந்தில்குமாரையும் படுகொலை செய்தார். கோர்ட் அருகே வைத்து இந்தக் கொலை நடந்தது.
சூப் போடுவதிலும், வெட்டுவதிலும் மட்டுமல்லாமல், துப்பாக்கியால் குறி பார்த்து சுடுவதிலும் பாண்டியன் கில்லாடியாம். அதேபோல வெடிகுண்டு தயாரிப்பு மற்றும் குறி பார்த்து வீசுவதிலும் பலே ஆசாமியாம்.
2004-ம் ஆண்டு சென்னை திருவேற்காட்டில் இவரது எதிரிகள் மீது வெடிகுண்டு வீசிய சம்பவம் நடந்தது. இதுதொடர்பாக திருவேற்காடு போலீசார் வெடிகுண்டு வழக்கு பதிவு செய்தனர்.
அதே 2004-ம் ஆண்டில் சென்னை கோட்டூர்புரத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டி வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டார் பாண்டியன். பின்னர் மீண்டும் அதே கோட்டூர்புரத்தில் மீண்டும் துப்பாக்கியை காட்டி வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டார். சைதாப்பேட்டை பகுதியிலும் துப்பாக்கியை காட்டி கொள்ளையடித்தார்.
2004-ம் ஆண்டில்தான் திண்டுக்கல் பாண்டியன் சென்னையில் முதல் முதலாக தனது ரவுடி தொழிலை தொடங்கினார்.
'மெட்ராஸ்' பாண்டியன்!
சென்னையிலும் அவரது 'தொழில்' ஓகோவென்று வளர்ந்ததால் பாண்டியனின் பெயரும் மாறியது. அன்று முதல் அவர் 'மெட்ராஸ்' பாண்டியன் என்று அழைக்கப்பட்டார்.
2007-ம் ஆண்டு பட்டிணபாக்கத்தில் கொலை சதியுடன் வலம் வந்த பாண்டியனை, துணை கமிஷனர் மவுரியா தலைமையில் போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வைத்து கைது செய்தார். ஆனால் தனது செல்வாக்கை பயன்படுத்தி பாண்டியன் வெளியே வந்து விட்டார்.
மொரீஷியஸில் பாதிரியாரை குடும்பத்தோடு கொளுத்தினார்..
தமிழகத்தை கலக்கி வந்த பாண்டிக்கு வெளிநாட்டில் கொலை செய்ய ரூ.10 லட்சம் பேசப்பட்டது. அதை ஏற்று மொரீசியஸ் நாட்டிற்கு விமானத்தில் பறந்த பாண்டியன் அங்கு பாதிரியார் ஒருவரை வீட்டுடன் எரித்து கொன்றார்.
இதேபோல, நேபாளத்தில் நக்சல்களின் தலைவனாக செயல்பட்ட ஒருவருக்கு, பாண்டியன் சில பிரச்சினைகளை தீர்த்துக் கொடுத்ததால், நேபாள நட்பு கிடைத்தது. சில காலம் அங்கும் பதுங்கியிருந்தார்.
1-5-2009-ல் கே. கே. நகரில் இரட்டை சிம்கார்டு டீலர் சங்கரன் திவாகரை ரூ.3 லட்சம் பணத்திற்காக தீர்த்துக் கட்டினார். இந்த வழக்கில் பாண்டியன் தேடும் குற்றவாளியாக அறிவிக்கபட்டான்.
பின்னர் கனிம வள சேர்மன் சரவணன், மனைவி, வேலைக்காரி ஆகிய 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கிலும் பாண்டியனுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். அவரை கைது செய்து விசாரிக்க பல கட்ட முயற்சி மேற்கொண்டனர். அது முடியாமல் போனது.
நடிகையிடம் மயங்கினார்
பிரபல முன்னாள் நடிகை ஒருவரிடம் பாண்டியனுக்கு நெருக்கம் ஏற்பட்டு அவரிடம் மயங்கிக் கிடந்ததாகவும் ஒரு தகவல் கூறுகிறது. அந்த நடிகையுடன், நீலாங்கரையில் உள்ள நண்பரின் பண்ணை வீட்டில் தங்கி ஓவ்வெடுப்பாராம் பாண்டியன்.
64 வழக்குகள்...
பாண்டியன் மீது சென்னை, திண்டுக்கல், மொரீஷியஸ் உள்ளிட்ட இடங்களில் 15 கொலை உள்பட 64 வழக்குகள் உள்ளனவாம்.
பாண்டியன் செய்தது ரவுடித்தனமாக இருந்தாலும் சில 'டிசிப்ளின்களை' கடைப்பிடித்து வந்தாராம். ஒரு குற்றத்தை செய்து விட்டால், அடுத்த 3 மாதத்திற்கு வெளியே வர மாட்டார். செல்போனைக் கூட ஆப் செய்து விடுவாராம். தனது நண்பர்கள் மற்றும் மனைவி, குழந்தைகளோடு எங்காவது போய் ஜாலியாக இருப்பாராம்.
கடவுள் பக்தி நிறைய உண்டாம். ஜோசியத்திலும் அபார நம்பிக்கை உண்டாம். எனது ஜாதகத்தில் போலீஸ் கையில் தான் எனக்கு சாவு என்று உள்ளது. எனவே என்றாவது ஒருநாள் போலீசின் துப்பாக்கி குண்டுக்குத்தான் நான் பலி ஆவேன் என்று கூட்டாளிகளிடம் சொல்லி வருவாராம்.
'பன்ச்' வசனம்
அதேபோல எதிரிகளை வெட்டும்போதும், என் சாவு போலீஸ் கையில் இருக்கு, உன் சாவு என் கையில் இருக்கு என்று 'பன்ச்' வசனம் பேசியபடிதான் போட்டுத் தள்ளுவாராம்.
ரவுடிகள் என்றாகி விட்டால் குடிப் பழக்கம் இல்லாமல் இருக்காது. அதேபோல பாண்டியனும் நன்றாக குடிக்கும் வழக்கமுடையவர். ஆனால் தொழிலில் இருக்கும்போது குடிக்க மாட்டாராம். முடித்துவிட்டு வந்துதான் கும்மாளமாக இருப்பாராம்.
அதேபோல பெண்கள் பழக்கமும் இவருக்கு உண்டு. அதேசமயம், தனது மனைவி, குழந்தைகளிடம் அதிக பாசம் வைத்திருந்தாராம். இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
மனைவி, மகன், மகளை அனாதையாக்கி விட்டு தான் சொன்னபடியே போலீஸாரின் குண்டுகளுக்கு இரையாகி விட்டார் பாண்டியன்.












Click it and Unblock the Notifications