பிரபாகரனின் மரண சான்றிதழை இலங்கை வழங்கவில்லை- சிபிஐ
டெல்லி: விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் மரண சான்றிதழை இலங்கை அரசு இதுவரை வழங்கவில்லை என்று சிபிஐ இயக்குனர் அஸ்வினி குமார் கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பிரபாகரன் தேடப்படும் குற்றவாளி ஆவார். எனவே, இந்த வழக்கு விசாரணைக்காக, பிரபாகரனின் மரண சான்றிதழை அளிக்குமாறு இலங்கை அரசிடம் சிபிஐ கேட்டுக் கொண்டது.
இந் நிலையில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் இது தொடர்பாக சிபிஐயிடம் விளக்கம் கோரி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு பதிலளித்த சிபிஐ, பிரபாகரனின் மரண சான்றிதழை இலங்கை அரசு இன்னும் அனுப்பவில்லை என்று பதில் தந்தது.
ஆனால், சமீபத்தில் நிருபர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், பிரபாகரனின் மரணத்தை உறுதிப்படுத்தும் ஆவணத்தை இலங்கை அரசு சிபிஐயிடம் தந்துவிட்டதாகக் கூறியிருந்தார்.
இதனால் இந்த விவகாரத்தில் குழப்பம் நிலவி வந்தது.
இந்நிலையில் சிபிஐ இயக்குனர் அஸ்வினி குமார் கூறுகையில்,
பிரபாகரனின் மரண சான்றிதழை அளிக்கும்படி இலங்கை வெளியுறவு அமைச்சகத்திடம் சிபிஐ கோரியுள்ளது. இதுவரை எங்களிடம் எந்த ஆவணமும் அளிக்கப்படவில்லை. விரைவில் அது கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
இலங்கை அரசு அளிக்கும் எந்தவொரு ஆவணத்தையும் கோர்ட்டில் தாக்கல் செய்வோம். அதன்பிறகு வழக்கை முடித்துக் கொள்வது பற்றி கோர்ட்டு இறுதி முடிவு எடுக்கும்.
ராஜீவ் கொலை வழக்கின் ஆயுள் தண்டனை கைதி நளினியின் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசுதான் இறுதி முடிவு எடுக்க வேண்டும். ஒருவேளை நளினி விடுதலை செய்யப்பட்ட பிறகு, அவரது நடமாட்டத்தை கண்காணிக்கும்படி நீதிமன்றம் அறிவுறுத்தினால், அதற்கான நடவடிக்கைகளை புலனாய்வு அமைப்புகள் மேற்கொள்ளும் என்றார் குமார்.












Click it and Unblock the Notifications