கோடைகால சிறப்பு ரயில்கள் அறிவிப்பு: முன்பதிவு தொடங்கியது
சென்னை: சென்னை, கோவை, நாகர்கோவில், பெங்களூர் மற்றும் கேரளாவுக்கு கோடைக்கால சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கோடை விடுமுறையை ஒட்டி ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா தளங்களுக்கும், சொந்த ஊர்களுக்கும் மக்கள் அதிகளவில் செல்வது வழக்கம்.
கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இன்று முதல் (புதன்கிழமை) சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவு தொடங்குகிறது.
சிறப்பு ரயில்களின் விவரம் வருமாறு:
வரும் ஏப்ரல் 6ம் தேதி முதல் ஜூன் 8 வரை சென்னை-கோவை இடையே (0622/0621) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. கோவையில் இருந்து செவ்வாய் கிழமை இரவு 11.55 மணிக்கும், சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து புதன்கிழமை காலை 8.15 மணிக்கும் இந்த ரயில் புறப்படும்.
சென்னை எழும்பூர்-நாகர்கோவில் இடையே (0605/0606) சிறப்பு வாராந்திர ரயில் ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் 25 வரை இயக்கப்படுகிறது. எழும்பூரில் இருந்து வியாழன் தோறும் இரவு 8.20 மணிக்கும், நாகர்கோவிலில் இருந்து வெள்ளிதோறும் பகல் 1.30 மணிக்கும் இந்த ரயில் புறப்படும்.
மேலும், நாகர்கோயில்-சென்னை சென்ட்ரல் இடையேயும் சிறப்பு ரயில் (0604/0603) இயக்கப்படுகிறது. இந்த ரயில் சென்ட்ரலில் இருந்து திங்கள்தோறும் பகல் 3 மணிக்கும், நாகர்கோவிலில் இருந்து மாலை 4.30 மணிக்கும் புறப்படும். ஏப்ரல் 3 முதல் ஜூன் 28 வரை இந்த ரயில்கள் இயங்கும்.
சென்னை-கொச்சுவேலி இடையே (0631/0632) ஏப்ரல் 7 முதல் ஜூன் 2 வரை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. சென்ட்ரலில் இருந்து புதன்கிழமை இரவு 11.30மணிக்கும், கொச்சுவேலியில் இருந்து வியாழன் இரவு 8.10 மணிக்கும் புறப்படும்.
பெங்களூர்-எர்ணாகுளம் இடையே (0651/0652) ஏப்ரல் 5 முதல் ஜூன் 15 வரை இயக்கப்படும் ரயில், பெங்களூரில் செவ்வாய் தோறும் மாலை 5.15க்கும், எர்ணாகுளத்தில் திங்கள் தோறும் மாலை 6.50க்கும் புறப்படும்.
பெங்களூர் எர்ணாகுளம் இடையே மேலும் (0653/0654) ஒரு சிறப்பு ரயிலும் இயக்கப்படுகிறது. இந்த ரயில்கள் எர்ணாகுளத்தில் இருந்து வியாழன் கிழமை இரவு 9.15க்கும், பெங்களூரில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை 6.50க்கும் புறப்படும். ஏப்ரல் 1ல் துவங்கி ஜூன் 18 வரை இயக்கப்படும்.












Click it and Unblock the Notifications