பெட்ரோல் - டீஸல் விலை உயர்வு இன்னும் இருநாட்கள் தள்ளி வைப்பு... மானியத்தை அதிகரிக்க யோசனை!
டெல்லி: பெட்ரோல், டீஸல், கேஸ் போன்றவற்றின் விலையை உயர்த்துவதில் இன்னும் சற்று நிதானத்தைக் கடைப்பிடிக்க முடிவுசெய்துள்ளது மத்திய அரசு. இந்த முறை விலை உயர்வை முடிந்தவரைத் தடுக்க பெட்ரோலிய நிறுவனங்களுக்கு தரப்படும் மானியத்தை அதிகரிக்கலாமா என்பது உள்ளிட்ட மாற்று வழிகளை யோசித்து வருகிறது மத்திய அரசு.
மக்களின் கோபத்துக்கு ஆளாக வேண்டி வரும் என்பதாலேயே இந்த யோசனை என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கச்சா எண்ணெயின் விலையில் தாறுமாறான உயர்வு ஏற்படுவதால் பெட்ரோல் - டீஸல் விலையையும் அதற்கேற்ப உயர்த்திக் கொள்ளும் அதிகாரம் தங்களுக்கு வேண்டும் என எண்ணெய் நிறுவனங்கள் கோரி வருகின்றன.
ஆனால் மக்கள் நல அரசு என்று சொல்லிக் கொண்டு வெறும் லாப நஷ்டம் பார்க்கும் கம்பெனியாக செயல்பட முடியாது என்பதால், மத்திய அரசு பெட்ரோலியப் பொருள்களின் முழு விலைச் சுமையையும் மக்கள் தலையில் சுமத்தாமல் குறிப்பிட்ட அளவு மானியம் வழங்கி வருவதாகச் சொல்லப்படுகிறது.
ஆனால் உண்மையில் இந்த மானியம் கேஸ் மற்றும் மண்ணெண்ணைக்கு மட்டுமே தரப்படுகிறது. பெட்ரோலும் டீஸலும் அந்தந்த நேரத்து விலை நிலையை ஒட்டியே விற்கப்படுகின்றன. இவற்றுக்கு மானியம் என்பதே கிடையாது. இல்லாவிட்டால் கடந்த சில மாதங்களுக்கு முன் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலுக்கு ரூ 4-ம் டீஸலுக்கு ரூ3-ம் லாபம் சம்பாதிப்பதாக அமைச்சர் முரளி தியோராவால் கூறியிருக்க முடியாது.
ஆனால் இப்போது மார்ச் மாதம் பெறும் தொகுப்புக்கான கச்சா விலை உயர்ந்துவிட்டதால், அதற்கு இப்போதே பெட்ரோல் டீஸல் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களின் விலையையும் உயர்த்தியாக வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்கள் கோரி வருகின்றன.
அப்படி உயர்த்துவதில் சிக்கல் இருந்தால், அந்தப் பொறுப்பை மத்திய அரசு தங்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்கின்றன இந்த நிறுவனங்கள். இல்லாவிட்டால், பெட்ரோலியப் பொருள் விற்பனையில் ஏற்படும் நஷ்டத்தைச் சரிகட்ட மானியத்தின் அளவை அதிகரிக்க வேண்டும் என்று மாற்று யோசனையையும் வைத்துள்ளன.
இதில் எந்த முடிவை எடுப்பது என்று இன்னும் மத்திய அரசு இறுதி முடிவுக்கு வரவில்லை.
எனவே நாளை மறுநாள் மீண்டும் நிதியமைச்சர், பெட்ரோலியத்துறை அமைச்சர் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசுகிறார்கள். பிரதமர் மற்றும் சோனியா காந்தியுடன் கலந்து பேசிவிட்டு விரைவில் முடிவை அறிவிக்க உள்ளனர்.
சோனியா எதிர்ப்பு:
பெட்ரோல் டீஸல் விலை உயர்வுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் ப சிதம்பரம் ஆகியோர் எதிர்ப்பு காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ஆனால் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோராவும் விலை உயர்வுக்கு ஆதரவு காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை மறுநாள் இதுகுறித்த இறுதி முடிவை மத்திய அரசு அறிவிக்க உள்ளது.












Click it and Unblock the Notifications