சாவின் விளிம்பில் வாழும் பெண்மணி: கருணாநிதியுடன் உருக்கமான சந்திப்பு!
சென்னை: உடல் உறுப்புகள் செயலிழந்து இறக்கும் தருவாயில் உள்ள பெண்மணி, தனது இறுதி ஆசையாக முதல்வர் கருணாநிதியை நேற்று சென்னை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து பேசினார்.
சென்னை வடபழனியை சேர்ந்தவர் அனுராதா (45). இவர் 20 வயதில் இருந்த போதே தசை செயலிழப்பு நோயால் பாதிக்கப்பட்டார்.
தற்போது நோயின் தாக்கம் அதிகரித்து, உடல் உறுப்புகள் அனைத்தும் மெல்ல செயிழக்கத் தொடங்கி, இறக்கும் தருவாயில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தாய், தந்தை இல்லாத அனுராதா, அடையாறில் உள்ள காப்பகம் ஒன்றில் தங்கியிருக்கிறார். உயிர் பிரிவதற்கு முன் தனது சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள நினைத்த அனுராதா, இதுகுறித்து தனது தம்பி மற்றும் தங்கையிடம் கூறியுள்ளார்.
கோயிலுக்குச் செல்வது, பிடித்த இடங்களை பார்ப்பது போன்றவற்றுக்கு இடையே, முதல்வர் கருணாநிதியை நேரி்ல் சந்திக்க விரும்புவதாகவும் அனுராதா கூறியுள்ளார்.
இதுகுறித்து மருத்துவர்கள் மூலம், முதல்வர் அலுவலகத்துக்கு தகவல் தந்தவுடன் அனுமதி கிடைத்தது. இதையடுத்து, நேற்று சென்னை தலைமைச் செயலகத்துக்கு ஆம்புலன்ஸ் வேன் மூலம் அனுராதா அழைத்துச் செல்லப்பட்டார்.
தலைமை செயலகத்திற்கு முதல்வர் கருணாநிதி வந்த உடன் முதலாவதாக அனுராதாவை சந்தித்தார். அப்போது, டாக்டர்களிடம் அனுராதாவை தாக்கியுள்ள நோய் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது கருணாநிதியுடன் பேசிய அனுராதா, தனக்கு ஏற்பட்ட இந்நோய் வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது. அதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அனுராதாவை தாக்கியுள்ள நோய் குறித்து மருத்துவர்கள் கூறுகையில், 'அனுராதாவை மஸ்குலர் டிஸ்ட்ரஃபி (Muscular dystrophy) என்ற நோய் தாக்கியுள்ளது. இந்த நோய்க்கு சிகிச்சை கிடையாது. பொதுவாக இந்த வகையான நோய் ஆண்களைத் தான் தாக்கும்.
இந்த நோய் தாக்கினால் உடல் உறுப்புகள் செயல் இழந்து 5 ஆண்டுகளில் இறந்து விடுவார்கள். ஆனால், தனது மன உறுதியால் அனுராதா இவ்வளவு நாள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்' என்றனர்.












Click it and Unblock the Notifications