இந்தியாவை ஆட்டிப்படைத்த கிழக்கிந்தியக் கம்பெனியை வாங்கினார் இந்தியர் சஞ்சீவ் மேத்தா!

இந்தியர்கள் ஒவ்வொருவரின் மனிலும் நீங்காத இடம் பிடித்த பெயர்களில் கிழக்கிந்தியக் கம்பெனிக்கும் இடம் உண்டு. இந்தியர்களை ஆட்டிப்படைத்து, அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்கள், இந்தியாவுக்குள் நுழை நுழைவாயிலாக அமைந்ததுதான் இந்த கிழக்கிந்தியக் கம்பெனி.
இப்படிப்பட்ட பெரும் வரலாற்றை தன்னகத்தேக் கொண்டுள்ள இந்த நிறுவனத்தை 48 வயதேயாகும் இந்தியத் தொழிலதிபரான சஞ்சீவ் மேத்தா என்பவர் விலை கொடுத்து முழுக்க தன் வசப்படுத்தி விட்டார். அதாவது நம்மை அடிமைப்படுத்திய கிழக்கிந்தியக் கம்பெனிக்கு அவர் தற்போது பாஸ் ஆகியுள்ளார்.
கிழக்கிந்தியக் கம்பெனியைக் கையகப்படுத்துவதற்காக அவர் கடந்த 6 ஆண்டுகளாக கடுமையாக பாடுபட்டுள்ளார். உண்மையில் 2004ம் ஆண்டே நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை வாங்கும் நடவடிக்கையைத் தொடங்கி விட்டார் மேத்தா. தற்போதுதான் அது கை கூடி நிறுவனம் மேத்தா கைக்கு வந்துள்ளதாம்.
இந்த நிறுவனத்தைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதற்காக உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மியூசியங்கள், தொல்பொருள் மையங்களுக்குச் சென்று விரிவான தகவல்களை சேகரித்துள்ளார் மேத்தார்.
கிழக்கிந்தியக் கம்பெனியின் வரலாறு 1600ம் ஆண்டு தொடங்குகிறது. அந்த ஆண்டில் டிசம்பர் 31ம் தேதிதான் கிழக்கிந்தியக் கம்பெனி கிழக்கு தனது வர்த்தகத்தைத் தொடங்க இங்கிலாந்து ராணி முதலாம் எலிசபெத் அனுமதி அளித்தார்.
தற்போதைய தெற்காசிய நாடுகள், தென் கிழக்கு ஆசிய நாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதிகளில் வர்த்தகத்தை மேற்கொள்ள இந்த நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இந்தப் பகுதிகளை அந்த நிறுவனம் கிழக்கிந்தியா என்று அழைத்தது. இதன் காரணமாகவே கிழக்கிந்தியா என்ற பெயரையும் அந்த நிறுவனம் சூடிக் கொண்டது. அதுவரை அப்படி ஒரு வார்த்தையே கிடையாது என்பது முக்கியமானது.
ஆனால் கிழக்கு இந்தியப் பகுதிகளில் வர்த்தகத்தைக் கவனிப்பதற்குப் பதில் இந்தியாவிலும், சீனாவிலும் கால் பதித்தது கிழக்கிந்தியக் கம்பெனி.
கிழக்கிந்தியக் கம்பெனி வர்த்தகம் செய்யும் நோக்கில் இந்தியாவுக்குள் நுழைந்த பின்னர் படிப்படியாக அந்த நிறுவனத்தின் மூலம் இந்தியப் பொருளாதாரத்தைக் கைப்பற்றி அப்படியே நாட்டையும் கைப்பற்றி விட்டது பிரிட்டிஷ் அரசு.
அதன் பின்னர் கடந்த 1874ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி கிழக்கிந்தியக் கம்பெனியை கலைத்து விட்டது இங்கிலாந்து அரசு. நிறுவனத்திடம் இருந்து வந்த அனைத்து அதிகாரங்களும் இங்கிலாந்து ராணிக்கு மாற்றப்பட்டு விட்டன. அதன் பின்னர் அந்த நிறுவனம் செயல்படவே இல்லை, முடங்கிப் போனது.
இப்படிப்பட்ட வரலாற்றை உடைய கிழக்கிந்தியக் கம்பெனியை இந்தியர் ஒருவர வாங்கியுள்ளார் என்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தகவல் வெளியாகி அனைத்து இந்தியர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அந்த தொழிலதிபரின் பெயர் சஞ்சீவ் மேத்தா. வெறும் 48 வயதே ஆகும் இளம் தொழிலதிபர் இவர்.
கிழக்கிந்தியக் கம்பெனியை வாங்கியுள்ள மேத்தா அதன் விற்பனையகத்தை முதலில் மேபேர் பகுதியில் தொடங்கவுள்ளார். அடுத்து லண்டனில் ஒரு கிளை பரப்புகிறார்.
இதுதவிர இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள், ஜப்பான், ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் கிழக்கிந்தியக் கம்பெனியின் கிளைகளைக் கொண்டு போகப் போகிறாராம் மேத்தா.
இந்த வர்த்தகக் கிளைகளில் காபி, டீ, நறுமணப் பொருட்கள், சாக்லேட்கள், தோல் பொருட்கள், மரச் சாமான்கள் ஆகியவற்றை விற்கத் திட்டமிட்டுள்ளார் மேத்தா.
சஞ்சீவ் மேத்தா மும்பையில் பிறந்தவர் ஆவார். இங்கிலாந்தில் செட்டிலாகி விட்டவர். 15 மில்லியன் டாலர் மதிப்பீட்டில், கிழக்கிந்தியக் கம்பெனியை தன் வசப்படுத்தி சாதனை படைத்துள்ளார்.
தனது சாதனை குறித்து மேத்தா கூறுகையில், உண்மையில் இது மிகப் பெரிய சாதனையாகும். எனது நாட்டை அடிமைப்படுத்திய கம்பெனியை வாங்கி விட்ட பெருமை உள்ளது.
நம்மை ஆட்டுவித்த நிறுவனத்தை இனி நான் கட்டுப்படுத்தப் போகிறேன் என்ற உணர்வே மிகப் பெரிய சந்தோஷத்தைக் கொடுக்கிறது.
இந்த நிறுவனத்தை வாங்கும் முன்பு அது குறித்து அறிவதற்காக பல நாடுகளுக்கும் நான் போனேன். அப்போது இந்த நிறுவனம் நடத்திய வர்த்தக முறைகள், அதன் தொழில் செயல்பாடுகள், அது தொடர்பான வரலாறுகளைத் தெரிந்து கொண்டேன் என்றார் மேத்தா.
இனி கிழக்கிந்தியக் கம்பெனிக்கு இந்தியர்தான் ஓனர் என்ற உணர்வு பெரும் வியப்பாகத்தான் உள்ளது.












Click it and Unblock the Notifications