மதுரை செரீனாவிடம் ரூ. 1.5 கோடியை ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை தாசில்தார்நகர் அன்புநகரை சேர்ந்தவர் செரீனா பானு. இவரையும், இவருடைய தாயார் ரமீஜாபானு, கார் டிரைவர் சதீஷ் ஆகியோரையும் 30 கிலோ கஞ்சா கடத்தியதாக கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில், 2003-ம் ஆண்டு போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து கார், 1 கோடியே 40 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 21 பவுன் தங்க நகைகள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.
பரபரப்பான இந்த வழக்கிலிருந்து கடந்த 2006ம் ஆண்டு செரீனா உள்ளிட்ட 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் செரீனாவிடம் இருந்து கைப்பற்றிய பணத்துக்கு வருமானவரி செலுத்தாததால் அந்த பணத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மதுரை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை கோர்ட் தள்ளுபடி செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, வருமான வரித்துறை சார்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் அப்பீல் செய்யப்பட்டது.
அதேசமயம், செரீனா தனது கார், தங்க நகைகள், பாஸ்போர்ட் ஆகியவற்றை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அதே வேளையில் கடம்பூரைச் சேர்ந்த ஜமீன்தார் ஜெகதீஷ்ராஜா என்பவர் அந்த பணம் தனக்கு சொந்தமானது என்று மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுக்கள் அனைத்தையும் நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி விசாரித்தார். விசாரணைக்குப் பின்னர் நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
செரீனா பானுவிடம் இருந்து கைப்பற்றிய பணம் தன்னுடையது என்று ஜெகதீஷ்ராஜா கூறி இருப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அந்த பணம் செரீனாவிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதால் அவரிடமே அந்த பணத்தை ஒப்படைக்க வேண்டும்.
அதே வேளையில் அந்த பணத்தை போலீசார் கைப்பற்றிய நாளில் இருந்து வருமானவரியை கணக்கிட்டால் 97 லட்சத்து 18 ஆயிரத்து 131 ரூபாய் வருமான வரி செலுத்தப்பட வேண்டும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே செரீனாவுக்கு அளிக்க வேண்டிய 1 கோடியே 40 லட்சத்து 18 ஆயிரம் ரூபாயுடன் அதற்கான வட்டித் தொகையை கணக்கிட்டு அந்த மொத்த பணத்தில் இருந்து 97 லட்சத்து 18 ஆயிரத்து 131 ரூபாயை வருமான வரிக்காக எடுத்துக்கொண்டு மீதிப்பணத்தை செரீனா வசம் ஒப்படைக்க வேண்டும்.
இதுதவிர அவரிடமிருந்து கைப்பற்றிய கார், தங்க நகைகள், பாஸ்போர்ட் ஆகியவற்றையும் போலீசார் செரீனா பானுவிடமே ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.













Click it and Unblock the Notifications