திருச்சியில் ஆன்லைன் வர்த்தக மோசடி: பெண் கைது
திருச்சி: ஆன்லைன் வர்த்தகம் மூலமாக கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த கோவையை சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டார்.
திருச்சி புத்தூர் காலனியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர் சமையல் பொருட்கள் தயாரித்து விற்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இவரது நிறுவனத்துக்கு கோவையை சேர்ந்த ஒரு நிறுவனம் ஒன்றின் பெயரில் சுமதி என்பவர் கொத்தமல்லி, வத்தல், சீரகம் போன்ற மளிகை பொருட்களை ஆன்லைன் மூலமாக ரூ.38 லட்சத்துக்கு ஆர்டர் கொடுத்தார்.
பொருட்கள் குறிப்பிட்ட இடத்துக்கு அனுப்பப்ட்டதும் அதை பெற்றுக்கொண்ட சுமதி, ரூ.38 லட்சத்துக்கான காசோலையை கொடுத்தார்.
ஆனால் அவரது வங்கி கணக்கில் பணம் இல்லை என்று காசோலை திரும்பி வந்துவிட்டது. இதையடுத்து கோவையில் உள்ள கம்பெனிக்கு மோகன்ராஜ் நேரில் சென்று பார்த்த போது, அந்த நிறுவனம் மூடப்பட்டு இருந்தது.
இதுகுறித்து மோகன்ராஜ் திருச்சி உறையூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி சுமதியை கைது செய்தனர்.
ஆனால் தன்னை கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் தான் ஏமாற்றினார் என்று சுமதி போலீசில் கூறியுள்ளார். இதையடுத்து முருகேசனை போலீசார் தேடி வருகிறார்கள்.
சுமதி கைதானது குறித்து விவரம் தெரிந்தவுடன் அவரிடம் ஏமாந்த மேலும் பலர் புகார் கூறினார்கள்.
சென்னையை சேர்ந்த குமாரிடம் ரூ.18 லட்சமும், குஜராத் மாநிலம் ராஜ்காட்டை சேர்ந்த சதான் உமரிடம் ரூ.25 லட்சமும், யுனிகான் நிறுவனம் ராஜேந்திரனிடம் ரூ.10 லட்சமும் மோசடி செய்ததாக புகார்கள் வந்துள்ளன.
பட்டதாரிப் பெண்ணான சுமதி மற்றவர்களிடம் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்களை பெற்று வடமாநிலங்களில் விற்று பணம் பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது.
இதற்கு உடந்தையாக இருந்த முருகேசனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். சுமதி தற்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications