ராஜபக்சேவின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இந்தியாவில் சிறப்புப் பயிற்சி

மதுபான் நகரில் ஹரியானா மாநில போலீஸ் பயிற்சி அகாடமி உள்ளது. மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் கடந்த 2 மாதங்களாக இங்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவின் பாதுகாப்பு அதிகாரிகள் 33 பேருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்தப் பயிற்சி நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து 33 பேரையும் வழியனுப்பி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில், மாநில போலீஸ் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதே அகாடமியில், கடந்த 2008-ம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த 99 போலீஸ்காரர்களுக்கும் சிறப்பு பயிற்சி அளித்து அனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈழத்தில் போர் உக்கிரத்தில் இருந்தபோதும் கூட இலங்கைப் படையினருக்கு இந்தியாவின் பல்வேறு இடங்களில் சிறப்புப் பயிற்சிகளை இந்திய அரசு கொடுத்தது என்பது நினைவிருக்கலாம்.
சென்னை தாம்பரம் விமானப்படைத் தளத்தில், இலங்கை விமானப்படையினருக்கு பயிற்சி அளிப்பு நடந்தது. இந்தத் தகவல் வெளியில் தெரிந்ததால் பரபரப்பும் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் வேறு ஊருக்குக் கூட்டிச் செல்லப்பட்டு அங்கு பயிற்சி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ராஜபக்சேவின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வழியனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications