ஜேவிபியுடன் கை கோர்த்தார் பொன்சேகா - புதிய ஜனநாயக தேசியக் கூட்டணி உதயம்

அதிபர் தேர்தல் முடிந்த கையோடு பொன்சேகாவைப் பிடித்து ராணுவத்தின் பிடியில் போட்டு விட்டார் ராஜபக்சே.
தேர்தல் கூட்டணி, போட்டி குறித்த தனது முடிவை அவர் விரைவில் அறிவிக்க வேண்டும் என ரணில் விக்கிரமசிங்கே கோரி வந்தார். ஆனால் தற்போது தடாலடியாக புதிய கூட்டணி ஒன்றை தனது தலைமையில் உருவாக்கியுள்ளார் பொன்சேகா.
இதை அவரது மனைவி அனோமா, முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், முன்னாள் எம்.பியும், ராஜபக்சேவின் முன்னாள் ஆதரவாளருமான அர்ஜூன ரணதுங்கா, ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியின் பொதுச் செயலாளர் தில்வின் சில்வா உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
அப்போது அனோமா கூறுகையில், கொழும்பு மாவட்டத்திலிருந்து பொன்சேகா போட்டியிடுவார். தற்போது பல்வேறு கட்சிகளை இணைத்து புதிய கூட்டணி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு ஜனநாயக தேசியக் கூட்டணி என்று பெயரிடப்பட்டுள்ளது.
கூட்டணியின்த லைவராக பொன்சேகா இருப்பார். இக்கூட்டணியில் ஜனதா விமுக்தி பெரமுனா, நவ சிங்கள உருமயா, ஜனநாயக ஐக்கிய தேசிய கூட்டணி, ஐக்கிய மக்கள் கூட்டணி, தேசிய முஸ்லீம் கட்சி ஆகியவை இடம் பெறும் என்றார்.
பொன்சேகா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளில் சில அதிபர் தேர்தலின்போது, ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கூட்டணியில் இடம் பெற்றிருந்தவையாகும்.
பொன்சேகாவின் இந்தப் புதிய கூட்டணியின் மூலம், ராஜபக்சே தலைமையிலான கூட்டணி, ரணில் தலைமையிலான கூட்டணி, தற்போது பொன்சேகா தலைமையிலான கூட்டணி என மூன்று கூட்டணிகள் உருவாகியுள்ளன. மும்முனைப் போட்டி உருவாகியுள்ளது.
இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்டவை எந்தக் கூட்டணியில் இணையும் அல்லது தனி அணியாக போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
பொன்சேகா நடத்தப்படும் விதம்- அமெரிக்கா அதிருப்தி:
இந் நிலையில் பொன்சேகாவை கைது செய்துள்ள இலங்கை அரசு அவரை நடத்தும் முறை குறித்து அமெரிக்கா அதிருப்தி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிபிசி டிவிக்கு தெற்கு, மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ராபர்ட் பிளேக் அளித்துள்ள பேட்டியில், பொன்சேகா விவகாரத்தில் எதிர்பார்த்ததை விட மோசமான நடைமுறைகளே தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகின்றன. பொன்சேகா தொடர்பாக அரசு எதைச் செய்தாலும் அதை சட்டப்படி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
ஆனால் இதுவரை அப்படி நடந்ததாக நான் கருதவில்லை. நிச்சயம் இது அதிருப்தியை அளிக்கிறது. சட்டப்படியான முறையில் அவர் மீதான குற்றச்சாட்டுக்களை சுமத்தி, முறையான விசாரணையை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும்.
பொன்சேகான மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து எனக்குத் தெரியாது. எனவே அதுகுறித்து நான் கருத்துக் கூற முடியாது. அதை அரசு முடிந்தவரை பகிரங்கப்படுத்த வேண்டும்.
பொன்சேகா கைது செய்யப்பட்ட விதம் குறித்து இலங்கை மக்களே கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். அதை உணர்வுப்பூர்வமாகவும் தெரிவித்துள்ளனர். பல புத்த மடாதிபதிகள் இதைக் கண்டித்துள்ளனர். மரியாதைக்குரிய வகையில் பொன்சேகா கைது செய்யப்படவில்லை, நடத்தப்படவில்லை என்று புத்த மடாதிபதிகளே கூறியுள்ளனர். இதற்கு மேல் நான் சொல்ல எதுவும் இல்லை.
இப்போது இலங்கை அரசின் முன் உள்ள மிக முக்கியப் பணியாக நான் கருதுவது, இன்னும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை மீள் குடியேற்றம் செய்ய வேண்டும். இதற்கு அரசு அதி முக்கியத்துவம் தர வேண்டும். தங்களது ஊர்களுக்கும், வீடுகளுக்கும் அவர்கள் திரும்ப வழி செய்ய வேண்டும். இதை விரைவாகச் செய்ய வேண்டும்.
தேசிய மறு சீரமைப்புக்கு இலங்கை அரசு முக்கியத்துவம் தர வேண்டும். அதிகாரப்பகிர்வை விரைவுபடுத்த வேண்டும். மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளை நேர்மையான முறையில் நடத்த வேண்டும். இதன் மூலம் போரினால் பாதிக்கப்பட்ட புண்ணுடன் உள்ள மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என்றார்.
பொன்சேகா விடுதலை கோரிய மனு நிராகரிப்பு:
இதற்கிடையே, பொன்சேகாவை விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இலங்கை உச்சநீதிமன்றம் இன்று நிராகரித்தது.
அரசுக்கு எதிராக செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு கடந்த 2 வாரங்களாக ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பொன்சேகாவை விடுதலை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுவை விசாரித்து இன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பொன்சேகா தரப்பு கோரிக்கையை நிராகரித்தனர்.
எனினும், பொன்சேகாவை அவரின் குடும்பத்தினர் மற்றும் வக்கீல்கள் சந்திக்க அனுமதி அளிப்பதாகவும், அவரின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications