சென்னைக்கும் பரவிய பழிக்குப் பழி வாங்கும் கொலை வெறி - பாமக வக்கீல் கொலையின் பின்னணி
சென்னை: சென்னையில் பாமகவைச் சேர்ந்த வக்கீல் வன்னிய சம்பத் கொல்லப்பட்டது பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியே என்று தெரிய வந்துள்ளது.
பாமக அமைப்புச் செயலாளராகவும், எழும்பூர் கோர்ட்டில் வக்கீலாகவும் பணியாற்றி வந்தவர் அயனாவரத்தைச் சேர்ந்த வன்னிய சம்பத். இவர் நேற்று தனது மகன் சஞ்சீவை மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்துச்சென்று கொண்டிருந்தபோது ஒரு கும்பலால் வழிமறிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
மகன் கண் முன்பாகவே சம்பத்தை தீர்த்துக் கட்டியது அந்தக் கும்பல். இந்தக் கும்பலைச் சேர்ந்த 3 பேர் கோர்ட்டில் சரணடைந்துள்ளனர்.
பழிக்குப் பழி வாங்கும் வகையில் ஏற்கனவே நடந்துள்ள 2 கொலைகளின் தொடர்ச்சியாகவே இந்தக் கொலையும் நடந்துள்ளது தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
அயனாவரத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரின் தம்பி கதிர் ஒரு கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். இதையடுத்து பழிக்குப் பழி வாங்கும் வகையில் சங்கர் என்பவரின் தலைமையிலான கோஷ்டி, திருவிக நகரைச் சேர்ந்த விஜயக்குமார் என்பவரை சமீபத்தில் வீடு புகுந்து வெட்டிக் கொன்து.
இந்த வழக்கில் சங்கர் முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இவருக்கு ஆதரவாக சம்பத் செயல்பட்டு வந்தாராம். இதனால் விஜயக்குமார் கோஷ்டியினர் சம்பத் மீதும், சங்கர் மீதும் குறி வைத்தனர்.
யார் கிடைத்தாலும் போட்டுத் தள்ளுவது என்ற முடிவுடன் அவர்கள் சுற்றி வந்துள்ளனர்.
அவர்களின் வலையில் சம்பத் சிக்கி உயிரை விட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
பழிக்குப் பழி வாங்கும் வகையில் மூன்று கொலைகள் நடந்துள்ளன. வழக்கமாக இதுபோன்ற பழிக்குப் பழிவாங்கும் தொடர் கொலைகள் நெல்லை பக்கம்தான் அதிகம் நடைபெறும். ஆனால் தலைநகர் சென்னையில் இதுபோன்ற கொலைகள் தொடர்ந்து நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications