புதிய கட்டடங்களுக்கு வரி அதிகரிப்பு - மதுரை மாநகராட்சியை கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம்
சென்னை: மதுரை மாநகராட்சியில் புதிய கட்டிடங்களுக்கு 4 மடங்கு வரி உயர்த்தியதை கண்டித்து மார்ச் 5ம் தேதி தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில், 'மதுரை மாநகராட்சியில் கடந்த 2008 ஏப்ரல் முதல் புதிய கட்டிடங்களுக்கு 4 மடங்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது.
பொது சீராய்வில் தெருக்களின் தரம் 8 பிரிவுகளாக மாற்றியதில் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. சுகாதார நலனில் அக்கறை காட்டப்படவில்லை. அடிப்படை வசதிகளான தார்சாலை, சாக்கடைத் திட்டம் போன்றவை மோசமாக உள்ளன.
ஒரு புறத்தில் வரிகளை அதிகப்படுத்தியும், மறுபுறத்தில் வசதிகள் குறைந்தும் வருவதற்கு மாநகராட்சி நிர்வாகத்தின் பல துறைகளிலும் நடைபெறும் ஊழலே காரணம். இதனால் ஏழை, எளிய மக்கள், வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
மாநகராட்சியின் நிர்வாக சீர்கேட்டைக் கண்டித்தும் மதுரை மக்களுக்கு அடிப்படை வசதிகள் கோரியும் மதுரை தினமணி தியேட்டர் அருகில் 5ந் தேதி காலை 10 மணியளவில் தேமுதிக சார்பில் பொருளாளர் ஆர்.சுந்தர்ராஜன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்' என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications