அறிவுக்குப் பிறந்த நாள்- மு.க.ஸ்டாலினுக்கு ஜெகத்ரட்சகன் பிறந்த நாள் வாழ்த்துக் கவிதை
சென்னை: துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் கவிதை வடிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்தக் கவிதை:
இன்பத் தமிழ்நாட்டின் எழுச்சிக்குப் பிறந்த நாள்!
மக்கள் நெஞ்சத்தின் மகிழ்ச்சிக்குப் பிறந்த நாள்!
உள்ளாட்சி வாழ்வித்த உயர்ச்சிக்குப் பிறந்த நாள்!
உழைப்புக்குப் பொருள் கூறும் உணர்ச்சிக்குப் பிறந்த நாள்!
கள்ளங் கபடற்ற கண்ணியத்தின் பிறந்த நாள்!
பொற்காலம் படைக்கின்ற புண்ணியத்தின் பிறந்தநாள்!
அயலாரும் நேசிக்கும் அன்புக்குப் பிறந்த நாள்!
அய்யாவின் வழி செல்லும் அறிவுக்குப் பிறந்த நாள்!
மேம்பாலம் கண்ட மேன்மைக்குப் பிறந்த நாள்!
மேதைக்குப் பிறந்த மென்மைக்குப் பிறந்த நாள்!
சித்திரமாய் அலங்கரித்துச் சிங்காரச் சென்னையினை வித்தகமாய்க் காத்து வரும் வீரர்க்குப் பிறந்த நாள்!
தாழம்பூ வேட்டி கட்டித் தமிழ்போலச் சிரிக்கின்ற தமிழ்நாட்டின்துணை முதல்வர் தளபதிக்குப் பிறந்த நாள்!
முப்பழத்தின் கூட்டாகி முத்தமிழின் சாறாகி எப்பொழுதும் இனிக்கின்ற ஏந்தலுக்குப்பிறந்த நாள்!
அடியெடுத்து வைப்பதிலே அண்ணாவை அப்படியே படியெடுத்து வைத்திருக்கும் பண்புக்குப் பிறந்த நாள்!
எத்தனையோ நெருக்கடிகள் ஏவி விட்ட கணை தாங்கி அத்தனையும் பொடி செய்த ஆண்மைக்குப் பிறந்த நாள்!
திராவிடக் குடும்பத்தின் திசை விளங்கவே வந்து பேர் சொல்லும் - பேரப் பிள்ளைக்குப் பிறந்த நாள்!
கற்களிலும் முட்களிலும் கால்பதித்து- நல்லோரின் சொற்களிலே வாழ்கின்ற சுடருக்குப் பிறந்த நாள்!
கண்ணேறு படுமென்று கவலைப் படவைக்கும் முன்னேற்றக் கழகத்தின் மூச்சுக்குப் பிறந்தநாள்!
அடடா... தமிழ்க்குலத்தின் ஆயுளை நீட்டிக்கும் தன்னேரில்லா நல் தம்பிக்குப் பிறந்தநாள்!
நாடெங்கும் புகழ்கொண்ட நம்பிக்குப் பிறந்தநாள்! நமக்காக வாழ்கின்ற நம்பிக்கை பிறந்தநாள்!
விழுந்தால் விதையாகிப் பொழிந்தால் மழையாகி நடந்தால் நதியாகும் நன்மைக்குப் பிறந்தநாள்!
தகுதிகளால் முதலிடத்தைத் தான்பெற்று-தமிழ்நாட்டின் தொகுதியெலாம் சுற்றிவிட்ட சூரியனின் பிறந்தாள்!
“இவருக்கும் தவறுக்கும் எப்போதும் தொடர்பில்லை" எனமக்கள் கொண்டாடும் நேர்மைக்குப் பிறந்தநாள்!
விளம்பரங்கள் விரும்பாத வெளிச்சத்தின் பிறந்தநாள்!
அனைவருமே விரும்புகிற அனிச்சத்தின் பிறந்தநாள்!
ராஜராஜ சோழனுக்கு ராஜேந்திர சோழன்போல் கலைஞருக்குப் புகழ் சேர்க்கும் கவிதைக்குப் பிறந்தநாள்!
இந்தநாள் நமக்கெல்லாம் இன்பநாள் அல்லவா? இந்தநாள் மாண்புகளை இன்னும்நான் சொல்லவா?
பூமாரி பொழியுங்கள்!
புகழ்ப்பரணி பாடுங்கள்!
தேமதுரக் கீதங்கள் செவியெல்லாம் ஓதுங்கள்!
தளபதியைப் போற்றுங்கள்!
தமிழ்மாலை சூட்டுங்கள்!
இவர்போல் யாரென்றே எக்காளம் ஊதுங்கள்!
பலபதிகள் இருந்தாலும் “தளபதியே" தமிழ்நாட்டின் குலபதியாய் விளங்கிடவே கொள்கை முழக்குங்கள்!
சீராண்டு தளபதியார் நூறாண்டு வாழட்டும்!
செம்மொழியாய் உலகத்தின் திசையெல்லாம் ஆளட்டும்!
செந்தாமரைக் காட்டைச் சிரிப்பால் வென்றெடுத்த நந்தா மணிவிளக்கு...
நற்றமிழாய் ஒளிரட்டும்!
--












Click it and Unblock the Notifications