பஞ்சன் லாமாவுக்கு முக்கியப் பதவியை அளித்தது சீன அரசு

திபெத்தியர்கள் தலாய் லாமா தலைமையில் பல காலமாக, சீன அரசின் அடாவடி, ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடி வருகிறார்கள்.
இதை உடைக்க தன்னால் ஆன அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது சீன அரசு. திபெத்திய மத வழக்கப்படி, தலாய் லாமாவாக இருப்பவர்கள், தங்களுக்கு அடுத்த வாரிசாக சிறு வயதிலேயே ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவருக்கு பஞ்சன் லாமா என்று பட்டம் சூட்டி விடுவார்கள்.
தலாய் லாமாவின் மறைவுக்குப் பின்னர் இந்த பஞ்சன் லாமாதான் அடுத்த தலாய் லாமாவாக பொறுப்பேற்பார்கள்.
அந்த வகையில், தற்போதைய தலாய் லாமா அடுத்த பஞ்சன் லாமாவாக ஒரு சிறுவனைத் தேர்வு செய்தார். இதையடுத்து அதற்குப் போட்டியாக கடந்த 1995ம் ஆண்டு ஒரு கியால்ஸ்டன் நோர்பு என்ற சிறுவனை பஞ்சன் லாமாவாக தேர்ந்தெடுத்தது சீன அரசு.
தற்போது இவருக்கு 20 வயதாகப் போகிறது. தலாய் லாமா தேர்ந்தெடுத்த பஞ்சன் லாமா சிறுவனை அதற்குப் பிறகு யாருமே பார்க்கவில்லை. இந்த நிலையில் சீன அரசு தேர்ந்தெடுத்த பஞ்சன் லாமாதான் ஒரே வாரிசாக இருக்கிறார். எனவே அடுத்த தலாய் லாமா தேர்வின்போது பெரும் சிக்கல் ஏற்படும் என கருதப்படுகிறது.
இந்த நிலையில் தலாய் லாமாவுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் வகையிலும், அவரது செல்வாக்கைக் குறைக்கும் வகையிலும் பஞ்சன் லாமா நோர்புவுக்கு சீன அரசு புதிய பதவி ஒன்றை அளித்துள்ளது.
தலாய் லாமாவுக்கு எதிராக திபெத்தியர்களைத் திரட்டும் வகையில் இந்த நடவடிக்கையில் சீன அரசு ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
சீன கம்யூனிஸ்ட் அரசுக்கு பல்வேறு துறைகளில் ஆலோசனை கூற சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாடு என்ற கமிட்டி உள்ளது. இந்தக் கமிட்டியில், பல்துறைகளைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
தற்போது இந்தக் குழுவின் உறுப்பினராக பஞ்சன் லாமாவை நியமித்துள்ளது சீன அரசு.
இந்த வாரம் இக்கமிட்டியின் வருடாந்திர கூட்டம் நடைபெறுகிறது. அதில் பஞ்சன் லாமாவும் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சீன நாடாளுமன்றம் கூடுகிறது.
தலாய் லாமாவுக்கு எதிராக சீன அரசு வளர்த்து வரும் பஞ்சன் லாமாவுக்கு சமீப காலமாக சீன அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அவருக்கு அரசுப் பொறுப்புகளிலும் அதிக பங்கை அளிக்கத் தொடங்கியுள்ளது.
இதன் மூலம் திபெத்தியர்களிடையே பிளவை ஏற்படுத்தி அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள அது நினைக்கிறது.
தலாய் லாமாவுக்கு வயதாகிக் கொண்டு வருவதால் அவருக்குப் பின்னர் புதிய தலாய் லாமாவாக, நோர்புவை அறிவிக்கவும், தேர்ந்தெடுக்கவும் சீன அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு கிழக்கு சீனாவில் நடந்த புத்தமத மாநாட்டின்போது இந்த பஞ்சன் லாமா முதல் முறையாக வெளியுலகுக்கு வந்து பேசினார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications