பெட்ரோல் மீதான வரியை தமிழக அரசு குறைக்கலாமே-விஜயகாந்த்

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உணவுப் பண்டங்களின் விலை நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் திணறுகிறார்கள். விலையைக் குறைக்க விவசாயத்தை ஊக்குவிப்போம் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் பட்ஜெட்டில் உரங்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்காத மத்திய, மாநில அரசுகள் இப்போது அனைத்துப் பொருள்களின் மீதும் இறக்குமதி வரி, உற்பத்தி வரி, விற்பனை வரி ஆகியவற்றை உயர்த்தியுள்ளன. இதனால் விலைவாசி மேலும் உயர வழி வகுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வருமானம் பெறுகிறவர்களுக்கு பட்ஜெட்டில் ரூ. 12,000 சலுகை கிடைக்கிறது. அதுவும் கூடுதல் வரி விதிப்பினால் செலவாகிவிடும். ஒரு கையால் கொடுத்து மறு கையால் வாங்கிக் கொள்ளும் ஏமாற்று வித்தைதான் இது.
நடுத்தர மக்களுக்கே இந்த நிலை என்றால், வருமான வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லாத, வருமானமே இல்லாத ஏழைகளின் நிலை என்னவாகும்? குதிரை கீழே தள்ளியது மட்டுமல்லாது குழியும் பறித்த கதையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் ஆட்டோ, பஸ், லாரி ஆகியவற்றின் கட்டணங்கள் உயரும்.
ரயில்வே கட்டணம் உயராது என்று ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்தார். ஆனால் நிதியமைச்சர் ரயில்வே கட்டணத்தின் மீது சேவை வரி விதித்துள்ளார். இதன்மூலம் மறைமுகமாக ரயில்வே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பெட்ரோலியப் பொருள்கள் மீது அதிகபட்ச வரி விதிக்கப்படுகிறது. தமிழகத்தில் லிட்டருக்கு 33 சதவீத வரி விதிக்கப்படுகிறது என்று அறிகிறேன்.
பெட்ரோலியப் பொருள்கள் மீது தமிழக அரசு விதித்துள்ள வரியைக் குறைத்தால் பெட்ரோல், டீசல் விலை குறையும். இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு மனு போடுவதற்குப் பதிலாக வரியைக் குறைத்து மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழக அரசு திகழலாம்.
விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசு மாநில அரசுகள் மீதும், மாநில அரசு மத்திய அரசு மீதும் பழி போடுவது மக்களை ஏமாற்றும் கபட நாடகமே.
இந்த நாடகத்தை நிறுத்திக் கொண்டு விலைவாசி உயர்வைக் குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications