பாகிஸ்தானுடன் பேச்சு.. நமக்கு நாமே தேடிக்கொண்ட அவமானம்: அத்வானி
டெல்லி: பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தியது நமக்கு நாமே தேடிக்கொண்ட அவமானம் என்று பாஜக தலைவர் அத்வானி கூறினார்.
தனது 'பிளாக்கில்' அவர் எழுதியுள்ள ஒரு கட்டுரை:
அமெரிக்காவின் நிர்பந்தத்துக்குப் பணிந்து பாகிஸ்தானுடன் இந்தியா மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்கியது. ஆனால் இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை. மீண்டும் பழைய நிலைக்கே திரும்பி உள்ளது.
பேச்சுவார்த்தை தொடரும் என்பதுதான் இந்தப் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட ஒரே முன்னேற்றம்!.
ஆனால், பாகிஸ்தானுடன் நடத்திய பேச்சு ஆக்கப்பூர்வமாக இருந்தது என்று நமது வெளியுறவுத்துறைச் செயலாளர் நிருபமா ராவ் கூறியுள்ளார். பாகிஸ்தான் வெளியுறவுச் செயலாளரோ இதற்கு நேர் மாறான கருத்தைச் சொல்லியிருக்கிறார்.
"இந்தியா எங்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, அதை நாங்கள் விரும்பவும் இல்லை. பாகிஸ்தான் எதைச் செய்ய வேண்டும் எதை செய்யக் கூடாது என்று சொல்ல இந்தியாவுக்கு உரிமையில்லை'' என்று பேச்சுவார்த்தைக்கு பின்னர் பாகிஸ்தான் தரப்பு கருத்துத் தெரிவித்துள்ளது.
ஆனால், இதுபோல் இந்திய அரசு தரப்பிலோ பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமானதாகவும் பயனுள்ளதாகவும் இருந்ததாக நமது வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கூறியுள்ளார்.
உண்மையி்ல் பேச்சுவார்த்தையின் விளைவு.. 500 வார்த்தைகளை கொண்ட ஒரு கூட்டறிக்கை மட்டுமே. அதைத் தவிர வேறொன்றுமில்லை.
பாகிஸ்தானை அணுகுவதில் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மிகவும் உறுதியாக இருந்தது. அப்போது இந்தியாவும் பாகிஸ்தானும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் பாகிஸ்தானில் இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளை செயல்பட அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியளிக்கப்பட்டது.
ஆனால் இப்போது நடந்த பேச்சுவார்த்தையில் பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் ஆதரவளிக்கக் கூடாது என்ற அம்சம் இடம் பெற்றதா என்பதே தெரியவில்லை.
தீவிரவாத அமைப்புகளை பாகிஸ்தான் மண்ணிலிருந்து அப்புறப்படுத்தினால்தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது 2001 ஜூலையில் பாகிஸ்தான் அதிபர் முஷாரப்புடன் ஆக்ராவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. முஷாரப் ஆக்ராவிலிருந்து கோபத்துடன் நாடு திரும்பினார். கூட்டறிக்கை கூட வெளியிடாமல் இந்திய அரசு தன்னை வெறும் கையுடன் அனுப்பிவிட்டதாக அவர் குறை கூறினார்.
எல்லையில் ஊடுருவும் பயங்கரவாதிகளைத் தடுத்து நிறுத்த பாகிஸ்தான் உறுதி ஏதும் அளிக்காததால் வாஜ்பாயும் நமது நிலையை சிறிதும் விட்டுக் கொடுக்கவில்லை. இந்த உறுதியான நிலை அவருக்கு நற்பெயரை பெற்றுத் தந்தது.
இதையடுத்து 2004ம் ஆண்டு ஜனவரியில் வாஜ்பாயும் முஷாரப்பும் சந்தித்துப் பேசினர். அப்போது தீவிரவாதிகள் விஷயத்தில் பாகிஸ்தானின் நிலை அடியோடு மாறியிருந்தது.
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளை பாகிஸ்தான் மண்ணிலிருந்து செயல்பட அனுமதிக்க மாட்டோம் என்று அப்போது கூட்டறிக்கையில் உறுதியளிக்கப்பட்டது. இவ்வாறு அத்வானி கூறியுள்ளார்.
மக்களவையில் பிரதமர்-அத்வானி காரசார விவாதம்:
இந் நிலையில் இந்த விவகாரத்தை இன்று மக்களவையில் கிளப்பிய அத்வானி, அமெரிக்க நிர்பந்தத்தால் தான் பாகிஸ்தனுடன் இந்தியா பேச்சு நடத்தியதாகவும், இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் நிலை மாறியுள்ளதாகவும் கூறினார்.
ஆனால், அதை பிரதமர் மன்மோகன் சிங் திட்டவட்டமாக மறுத்தார். இந்தியா-பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்காவின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.