திருச்சியில் இன்று கலைஞர் வீட்டு வசதித் திட்டம் தொடக்கம்
கிராமப் பகுதிகளில் உள்ள 21 லட்சம் குடிசைகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
வரும் நிதியாண்டில் ரூ. 1800 கோடியில் 3 லட்சம் குடிசைகள் கான்கிரீட் வீடுகளாக மாற்றப்பட உள்ளன. இத் திட்டத்துக்கான தொடக்க விழா திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் புதன்கிழமை மாலை 5 மணிக்கு
நடைபெறுகிறது.
விழாவுக்கு துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். மாநில அமைச்சர்கள் கே.என். நேரு, என். செல்வராஜ், மத்திய அமைச்சர் து. நெப்போலியன், தலைமைச் செயலர் கே.எஸ். ஸ்ரீபதி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தைத் தொடக்கிவைத்து தமிழக முதல்வர் கருணாநிதி விழாப் பேருரையாற்றுகிறார்.
விழாவில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் டி. சுதர்சனம் (காங்கிரஸ்), ஜி.கே. மணி (பா.ம.க), கே. பாலபாரதி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), வை. சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்ட்), டி. ரவிக்குமார் (விடுதலைச் சிறுத்தைகள்), அப்துல் பாசித் (இந்திய தேசிய முஸ்லிம் லீக்), பூவை. ஜெகன் மூர்த்தி (புரட்சி பாரதம்) ஆகியோர் வாழ்த்திப் பேசுகின்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர் வர மாட்டார் என்பது உறுதியாகத் தெரிகிறது. காரணம் தற்போது அவர் கொடநாட்டில் ஓய்வில் இருந்து வருகிறார்.
கலைஞர் வீட்டு வசதித் திட்டத் தொடக்க விழாவுக்காக ஆலமரத்தின் அடியில் இருப்பது போன்று விழா மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் திட்டத்தைத் தொடங்கி வைக்கும்போது குடிசை வீடு கான்க்ரீட் வீடாக மாறுவதைப் போன்ற சுழல் மேடை அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
துணை முதல்வர் ஸ்டாலின் நேற்றே திருச்சி வந்து விட்டார். விழா ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முதல்வர் வருகையால் திருச்சி நகரம் விழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது. எங்கு பார்த்தாலும் திமுக கொடிகள் பட்டொளி வீசிப் பறக்கின்றன.