15% செலவு குறைக்க துபாய் அரசு முடிவு
துபாய்: வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க துபாய் அரசு, 15 சதவீத செலவினங்களை குறைத்து, 370 கோடி திர்ஹாம் (இந்திய ரூபாயில் ரூ.4,602 கோடி) அளவுக்கு நிதியை சேமிக்க திட்டமிட்டுள்ளது.
கடந்த ஆண்டில் துபாய் ரியல் எஸ்டேட் மார்கெட் அடியோடு சரிந்தது. பங்குச் சந்தையிலும் பதட்டம் நிலவியது. ஏராளமானோர் வேலையிழந்தனர்.
அத்துடன், துபாய் அரசுக்குச் சொந்தமான துபாய் வேர்ல்டு கார்ப்பரேஷன் பெரும் கடனில் சிக்கித் தத்தத்தது. 26 பில்லியன் டாலர் அளவுக்கு கடன் சுமையில் இந்நிறுவனம் சிக்கியது உலகம் முழுவதையும் பங்குச்சந்தையில் பாதிப்பை எதிரொலித்தது.
மேலும், எண்ணெய் வளம் மிக்க அபுதாபியில் ஏராளமான நிறுவனங்கள் திவாலாயின.
இவற்றின் எதிரொலியாக துபாய் அரசு முதல்முறையாக கடந்த 2009 பட்ஜெட்டில் பற்றாக்குறையை அறிவித்தது. 2007ம் ஆண்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.3 சதவீதம் பற்றாக்குறை ஏற்படுமென பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
மேலும், 2009ம் ஆண்டில் 33.5 பில்லியன் திர்ஹாமாக இருந்த வருவாய் மதிப்பு, 2010ல் 29.4 பில்லியன் திர்ஹாமாக குறைந்தது.
ஆனால், மற்றொரு புறம் அரசின் செலவினங்கள் படிப்படியாக உயர்வதும் தவிர்க்க முடியாததானது. 2009ம் ஆண்டில் 35.4 பில்லியன் திர்ஹாமாக இருந்த செலவு, 2010ல் மேலும் 6.1 சதவீதம் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டது.
இதனால், செலவு குறைப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட துபாய் அரசு தீர்மானித்துள்ளதாக அடுத்த இடைக்கால பட்ஜெட்டுக்கான பணிகளில் ஈடுபட்டுள்ள நிதித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், சுமார் 15 சதவீதம் அளவுக்கு செலவுகளை குறைக்குமாறு அனைத்துத் துறைகளுக்கும் துபாய் அரசு அறிவுறுத்தி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன்மூலம் 3.7 பில்லியன் திர்ஹாம் (இந்திய ரூபாயில் ரூ.4,602 கோடி) சிக்கனப்படுத்தி, வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக நிதித் துறை அதிகாரிகள் கூறினர்.












Click it and Unblock the Notifications