பெட்ரோல், டீசல் விலை உயர்வு-எதிர்ப்பை கைவிட்ட திமுக!

பெட்ரோல், டீசல் மீதான சுங்க வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை ரத்து செய்யக் கோரியும், முடியாதபட்சத்தில் டீசல் மீதான வரி உயர்வையாவது ரத்து செய்யுமாறும் கோரி பிரதமருக்கும், சோனியா காந்திக்கும் முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியிருந்தார்.
அதன் பின்னர் இந்த விஷயத்தை திமுக பெரிய அளவில் வலியுறுத்தவில்லை. கிட்டத்தட்ட அதுகுறித்து பேசுவதையே நிறுத்தி விட்டது. சுருக்கமாக சொல்லப் போனால் ஒப்புக்கு ஒரு கடிதத்துடன் அது நின்று விட்டது.
அதேபோல திரினமூல் காங்கிரஸ் தலைவி மமதா பானர்ஜியும், கோரிக்கை விடுத்து கடிதம் எழுதினார், கொல்கத்தாவில் ஒரு போராட்டத்தை நடத்தினார். அத்தோடு நின்று விட்டார். மேலும், காங்கிரஸ் கூட்டணியிலிருந்து எங்களைப் பிரிக்க முடியாது என்றும் கூறி அந்த மேட்டரை முடித்துக் கொண்டார்.
மொத்தத்தில், இரு கட்சிகளுமே இந்த விஷயத்தை வலியுறுத்தாமல் விட்டு விட்டன. இதை இப்படியே திமுக விட்டு விட்டது என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்தது ராஜ்யசபாவில் திமுக உறுப்பினர் திருச்சி சிவாவின் பேச்சு.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய சிவா, காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ளதால் திமுக இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
ஒரு மாட்டு வண்டியை நேரான பாதையில் இழுத்துச் செல்லும் இரு மாடுகளைப் போல மத்திய அரசு சரியான பாதையில் செல்வதற்கு காங்கிரஸ் மற்றும் திமுகவின் செயல்பாடு ஒருங்கே அமையவேண்டும்.
2010-11 பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, உற்பத்தி மற்றும் இறக்குமதி வரிகளில் மாற்றம் செய்துள்ளதைத் தொடர்ந்து பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் வளர்ச்சிப் பணிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது என்றார்.
அதாவது, பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு, வளர்ச்சிப் பணிகளுக்கானதே என்பதை திமுக மறைமுகமாக கூறியுள்ளது.
இன்று குடியரசுத் தலைவர் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பதிலளித்து பிரதமர் மன்மோகன் சிங் பேசவுள்ளார்.












Click it and Unblock the Notifications