ட்விட்டிங் அதிகமானால் குவிட்டிங் தான்- சசிதரூருக்கு பாஜக அறிவுரை
டெல்லி: வெளியுறவுத்துறை இணை அமைச்சர் சசி தரூருக்கு பாஜக மூத்த தலைவர் வெங்கய்ய நாயுடு அறிவுரை கூறியுள்ளார்.
வெளியுறவு இணை அமைச்சர் சசிதரூர், டவிட்டர் என்ற சமூக வலையமைப்பில் உறுப்பினராக உள்ளார்.
மிக குறுகிய காலத்தில் 6 லட்சத்து 69 ஆயிரம் 'ஃபாலோயர்'களை பெற்று கம்பீர நடை போட்டு வருகிறார்.
இந்த வலையின் மூலம் பல முறை சசிதரூர் சர்ச்சைக்குரிய விவகாரங்களை எழுப்பி வந்ததுண்டு.
இதுமட்டுமின்றி, இணையமைச்சர் என்ற முறையில் அதிகாரப்பூர்வமாக அளிக்கும் பேட்டிகளில் கூட சசிதரூர் சர்ச்சைக்குரிய வகையில் பேசி குழப்பத்தை அவ்வப்போது ஏற்படுத்தி வந்தார்.
சமீபத்தில் பிரதமருடன் சவுதி அரேபியாவுக்கு அரசுமுறைப் பயணமாக சென்ற இவர், இந்தியா பாகிஸ்தான் பிரச்னையில், பாகிஸ்தானின் கூட்டாளி என்ற முறையில் சவுதி மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என குறிப்பிட்டார்.
பின்னர் சில மணி நேரம் கழித்து பத்திரிகையாளர்களை அழைத்து தான் பேசியதற்கு மறுப்பு பேட்டி ஒன்றை கொடுத்தும் குழப்பினார்.
வெளியுறவு விவகாரம் மற்றும் இந்திய அரசின் கொள்கை சார்ந்த விஷயங்களில் முதிர்ச்சியில்லாமல் பேசுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ராஜ்யசபாவில் நேற்று வெங்கையா நாயுடு பேசுகையில்,
'இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பிரச்னையில் சவுதி அரேபியா தலையிட்டு சமரசத்துக்கு உதவ வேண்டும் என்று இணை அமைச்சர் சசி தரூர் குறிப்பிட்டிருக்கிறார். இந்த விஷயத்தில் பிரதமர் மன்மோகன் சிங் இன்னமும் மௌனம் சாதிப்பது ஏன்?
வெளியுறவுத்துறையில் நம்முடைய கொள்கைகளை நாம் மாற்றிக் கொண்டுவிட்டோமா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
அமைச்சர் என்ற பதவியில் இருப்பவர்கள் தங்களுடைய மனதில் தோன்றுவதையெல்லாம் பேசக்கூடாது. அமைச்சரவையின் முடிவுக்கும் அரசின் முடிவுக்கும் கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
இது வெளியிடத்தில் பல்வேறு ஊகங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் இடம் கொடுத்துவிடும். தரூர் இப்படிப் பேசுவதும் கருத்து தெரிவிப்பதும் இது முதல் முறையோ, இரண்டாவது முறையோ அல்ல.
பலமுறை சசி தரூர் இதுபோல பேசியுள்ளார். பிரதமர் மன்மோகன் சிங் இதுபற்றி என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார் என தெரியவில்லை.
எனினும் சசிதரூருக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன் ட்விட்டிங் அதிகமானால், அப்புறம் பதவியில் இருந்து குவிட்டிங் தான்' என்றார்.
அவையில் பிரதமர் தவறான தகவல்
இதற்கிடையே, டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு வெங்கையா பேட்டி அளிக்கையில், 'ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கப்படுவதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். ஆனால் இது தவறான தகவல்.
எந்தவொரு இணை கமாண்டன்ட் அல்லது ராணுவ வீரரும் இத்தகைய ஊதிய உயர்வைப் பெறவில்லை. அதற்கான உத்தரவையும் பெறவில்லை. பிரதமர் அவையில் அளித்த தவறான தகவல் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவேயில்லை.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள இளைஞர்கள் விரும்பினால் நாடு திரும்பலாம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அறிவித்திருப்பது மிகவும் மோசமான, அபாயகரமான முடிவு.
பாஜக கூட்டணி ஆளும் மாநிலங்களில் குஜராத் முதலிடத்திலும், பிகார், உத்தராகண்ட், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. ஒரிசா ஐந்தாவது இடத்தில் உள்ளது.
சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8ம் தேதி மகளிர் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இதை பாஜக ஆதரிக்கும்' என்றார்.












Click it and Unblock the Notifications