வருமானத்துக்காக பொதுத்துறை பங்குகளை விற்கும் மத்திய அரசு!
டெல்லி: அரசுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று ரூ 25000 கோடி திரட்டுவதன் மூலம் ரூ 40000 கோடி நிதி இலக்கை எட்ட முடியும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் இதுகுறித்து வருவாய் செயலர் சுனில் மித்ரா பேசியதாவது:
நடப்பு நிதியாண்டில் பொதுத் துறை நிறுவன பங்கு வெளியீடுகள் மூலம் ரூ.25,000 கோடி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசின் இலக்கான ரூ. 40,000 கோடி வருவாயினை அடைவதற்கு வாய்ப்பு ஏற்படும்.
ஆயில் இந்தியா நிறுவனம், தேசிய அனல் மின் நிறுவனம் (என்.டி.பி.சி.), மற்றும் (என்.எச்.பி.சி.) ஆகிய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை வெளியிடுவதன் மூலம் நடப்பு நிதியாண்டில் ரூ. 25,000 கோடி திரட்டப்படும்.
இந்த நிதியாண்டில் வெளியிடுவதாக இருந்த சட்லஜ் சல் வித்யூத் நிகாம் நிறுவன பங்குகள் வரும் நிதியாண்டில் வெளியிடப்படும்," மித்ரா தெரிவித்தார்.
பிஎஸ்என்எல் பங்குகளும்...
லாபத்தில் இயங்கும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் 10 சதவீத பங்குகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி பங்குகள் வெளியீட்டிற்காக 60 பொதுத்துறை நிறுவனங்களின் பட்டியலை அரசு தயாரித்துள்ளது. இதற்கிடையே இன்ஜீனியர்ஸ் இந்தியா நிறுவனம் தனது பங்குகளை வெளியிடுவதற்கான ஒப்புதலை ஏற்கெனவே பெற்றுவிட்டது.
கோல் இந்தியா நிறுவனம், பி.எஸ்.என்.எல்., மற்றும் இந்திய உருக்கு ஆணையத்தின் (செயில்) பங்குகள் வரும் நிதியாண்டில் (2010-11) வெளியிடப்படும் என சுனில் மித்ரா தெரிவித்திருந்தார்.
பங்கு வெளியீடுகள் தொடர்பான நடவடிக்கைகளை வரும் ஏப்ரல் மாதத்தில் தொடங்க நிதி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications