மதுரையில் அண்ணா பல்கலை.-முதல்வர் அறிவிப்பார்: அழகிரி
மதுரை: மதுரையில் அண்ணா பல்கலைக்கழகம் அமைக்கப்படும். இதுதொடர்பான அறிவிப்பு சட்டசபைக் கூட்டத் தொடரில் முதல்வரால் அறிவிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் இடையப்பட்டியில், இன்று மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப பிளாஸ்டிக் தயாரிப்பு வளர்ச்சி மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக கலந்து கொண்ட மத்திய ரசாணயத்துறை அமைச்சர் மு.க.அழகிரி அடிக்கல்லை நாட்டி வைத்துப் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், திமுக அரசு தான் தேர்தலுக்கு முன்பு அளித்த ஒவ்வொரு வாக்குறுதியையும் நிறைவேற்றி சாதனை படைத்து வருகிறது. இது பெருமிதம் அளிக்கிறது.
மதுரையிலும் அண்ணா பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைள் வந்துள்ளன. இதுகுறித்து முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் கருணாநிதியும் வருகிற சட்டசபைக் கூட்டத் தொடரிலேயே இதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றார் அழகிரி.
வழக்கை தள்ளுபடி செய்ய அழகிரி கோரிக்கை:
இதற்கிடையே வழக்கு தொடர்ந்த மனுதாரர் காலமாகி விட்டதால் அவருடைய பிரதிநிதி அந்த வழக்கை தொடர அனுமதிக்கக் கூடாது. எனவே என் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் மு.க.அழகிரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
2009-ம் ஆண்டு தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. மதுரை தொகுதியில் போட்டியிட்ட மு.க.அழகிரி வெற்றி பெற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த மோகன் தோல்வியுற்று 2வது இடத்தைப் பிடித்தார்.
தேர்தலில் பல முறைகேடுகள் நடந்ததாக கூறி, மு.க.அழகிரி வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மோகன் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார்.
வழக்கு விசாரணையில் இருந்து வந்த நிலையில் மோகன் மரணமடைந்தார். இதையடுத்து மோகனுக்கு பதிலாக இந்த வழக்கை வேறு யாராவது நடத்த விருப்பமுள்ளதா என்று உயர்நீதிமன்றம் கேட்டது. இதுதொடர்பாக விளம்பரமும் வெளியிடப்பட்டது.
இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் ஏ.லாசர், மோகனுக்கு பதிலாக அவர் இடத்தில் இருந்து மோகனின் வழக்கை தானே நடத்த இருப்பதாக மனுத் தாக்கல் செய்தார்.
இதற்குப் பதில் தாக்கல் செய்யுமாறு அழகிரிக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி அவரும் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், மதுரை எம்.பி. தேர்தலில் மோகன் தான் என்னை எதிர்த்து போட்டியிட்டார். லாசர் என்னை எதிர்த்து போட்டியிடவில்லை. தேர்தலில் போட்டியிடுவதற்காக மனுதாக்கல் செய்துவிட்டு, தேர்தலின்போது வேட்பு மனுவை லாசரே திரும்ப பெற்றுக்கொண்டார்.
தேர்தலில் போட்டியிடாத ஒருவர், தேர்தல் முடிவுகளை எதிர்த்து வழக்கு தொடருவதற்கு தகுதி கிடையாது. அதற்கு சட்டங்களும் இடமளிக்கவில்லை. எனக்கு அடுத்தபடியாக அதிக ஓட்டுகளை பெற்றவர் மோகன்.
எனவே, நான் வெற்றி பெற்றதை எதிர்த்து தேர்தல் வழக்கு தொடருவதற்கு அவர் ஒருவருக்கே தகுதி உண்டு. எனவே, மோகனுக்கு பதிலாக அவரது வழக்கை லாசர் நடத்துவதற்கு அனுமதிக்க கூடாது.
மோகனுக்கான மாற்று வேட்பாளர் தான் என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரங்களை லாசர் காட்டவில்லை. எனவே, லாசரின் மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த மனுவைப் பரிசீலித்த நீதிபதி தனபலான், வருகிற 15ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications