10ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்தாண்டு முதல் செய்முறை தேர்வுகள்
கோவை: தமிழக அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் செய்முறை தேர்வுகள் நடத்தப்படவுள்ளன.
அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் தொடர்பான பயிற்சி முகாம் கோவை இந்துஸ்தான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று துவங்கியது.
அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தலா நான்கு ஆசிரியர்கள் பங்கேற்றுள்ள இந்த பயிற்சி முகாம் ஏழு நாட்கள் நடைபெறுகிறது.
பணிமனையை பள்ளிக் கல்வி இணை இயக்குனர் (மேல்நிலைக் கல்வி) கார்மேகம் துவக்கி வைத்து பேசுகையில்,
'வரும் 2010-11ம் ஆண்டில் இருந்து சமச்சீர் கல்வித் திட்டம் அமலுக்கு வருகிறது. இதில், 10ம் வகுப்புக்கும் இனி செய்முறை தேர்வுகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.
2011-12ல் 10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களை, இதற்கென ஒன்பதாம் வகுப்பு முதலே தயார்படுத்த வேண்டியது முக்கியம்.
இதற்கு அறிவியல் பாடத்திட்டத்தின்படி, பள்ளிகளில் ஆய்வக வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மாநிலத்தில் உள்ள 4,241 பள்ளிகளிலும் ஆய்வக வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
அனைத்து பள்ளிகளிலும் மின்சாரம், போன், இன்டர்நெட் வசதி ஏற்படுத்த வேண்டியதும் கட்டாயம்.
தற்போது பள்ளிகளில் வாங்கப்படும் செய்தி பத்திரிகைகள் மற்றும் இதழ்களை தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், வாட்ச்மேன் மட்டுமே படிக்கும் நிலை உள்ளது.
மாணவர்களுக்கு எந்த வகையிலும் இவை பயன் அளிப்பதில்லை. மாணவர்களின் வாசிப்புத் திறனையும் அறிவுத் திறனையும் மேம்படுத்த, அனைத்து மாணவர்களுக்கும் நல்ல பத்திரிகைகள் சென்றடைவது முக்கியம்.
அனைத்து பள்ளிகளின் புள்ளி விவரங்களையும் வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும். பள்ளிகளின் விவரங்களை மையமாகக் கொண்டு 32 மாவட்டங்களிலும், 'பர்சனல் மேனேஜ்மென்ட் சிஸ்டம்' எனும் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது' என்றார்.












Click it and Unblock the Notifications