திருவண்ணாமலை அருகே 2 அரசு பஸ்கள் மோதல் - 3 பெண்கள் பலி
திருவண்ணாமலை: சென்னையிலிருந்து சென்ற அரசு பஸ்சும், சென்னைக்கு வந்த அரசு பஸ்சும், திருவண்ணாமலை அருகே நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்தனர்.
சென்னையிலிருந்து இன்று காலை திருவண்ணாமலைக்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அதேபோல, சென்னையை நோக்கி ஒரு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.
கீழ்பென்னாத்தூர் அடுத்து கோமாட்சிபாடி அருகே வந்த போது இரு பஸ்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இதில் இரு பஸ்களின் முன் பகுதியும் பலத்த சேதமடைந்தது.
இந்தக் கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒரு பெண் உயிரிழந்தார். இடிபாடுகளில் சிக்கிக் காயமடைந்த 27 பேரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு மேலும் 2 பெண்கள் உயிரிழந்தனர். சம்பவ இடத்திலேயே உயிரிழந்தவர் பெயர் நந்தேஸ்வரி. சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்தவர். மற்ற இரு பெண்கள் குறித்த விவரம் தெரியவில்லை.
விபத்துக்குள்ளான இரு பஸ்களில் ஒரு பஸ்சின் டிரைவர் செல்போன் பேசியபடியே பஸ்சை ஓட்டிச் சென்றதாக பயணிகள் கூறியுள்ளனர்.
அரசு பஸ்களில் டிரைவர்கள் பணியின்போது செல்போனை வைத்திருக்கவே கூடாது என்று சமீபத்தில்தான் அரசு தடை விதித்தது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications