ராமதாஸ் கொடநாட்டுக்கு காவடி தூக்குவார், கோபாலபுரத்துக்கு குடம் தூக்குவார் - துரைமுருகன் நக்கல்

பென்னாகரம் இடைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் இன்பசேகரனை அறிமுகப்படுத்தும் பொதுக்கூட்டம் நேற்று பென்னாகரத்தில் நடந்தது.
கூட்டத்தில் தமிழக சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில்,
பென்னாகரம் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் இன்பசேகரனை வெற்றி வேட்பாளராக மாற்ற வேண்டும் என்பதே நமது லட்சியம். அதனை மனதில் கொண்டு நாம் வாக்கு சேகரிக்க வேண்டும்.
இந்த தொகுதி மக்கள் சாதனையை மட்டும்தான் பார்ப்பார்கள். சாதி, சாதி என்று சொன்னால் ஓட்டுபோட மாட்டார்கள். நாங்கள் எந்த பக்கம் இருக்கிறோமோ அவர்கள்தான் ஆட்சி அமைக்க முடியும் என்று சொல்லி ஒவ்வொரு முறையும் கூட்டணி மாறியவர்களை 2 பிரதான கட்சிகளுமே வேண்டாம் என்று ஒதுக்கிவிட்ட நிலை ஏற்பட்டு உள்ளது.
ஒரு முறை துரோகம் செய்தாலும், கடைசிவரை துரோகிதான். இந்த தேர்தலில் நிற்கும் 4 வேட்பாளர்களுமே ஒரே சாதியை சேர்ந்தவர்கள்தான். ஆனால் நிச்சயமாக ஜெயிப்பது தி.மு.க.தான்.
இப்போதுகூட மகனுக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி தருகிறோம் என்று சொன்னால், அவர் கொடநாட்டுக்கு காவடி தூக்குவார்; கோபாலபுரத்துக்கு குடம் தூக்குவார். உங்களை போன்றவர்களை அரசியலில் இருந்து நீக்குவதே எங்கள் முக்கிய நோக்கம் என்றார்.
அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பேசுகையில்,
தமிழகத்தில் சமூகநீதி வழங்குவதில் கலைஞரை தவிர யாரும் கிடையாது. முஸ்லிம் சமுதாயத்தினருக்கு 3.5 சதவீதம் சமூகநீதி வழங்கியவர் கலைஞர். அருந்ததியினர் மக்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கி சமூகநீதி காவலராக விளங்கி வருகிறார் கலைஞர்.
அதேநேரத்தில் முன்னேறிய சமுதாய மக்கள் பொருளாதார ரீதியில் பின்தங்கி இருந்தால்கூட அவர்களை கைத்தூக்கி விடுபவர் கலைஞர். அந்த அடிப்படையில்தான் பின்தங்கிய மாவட்டமான தர்மபுரியில் அரசு மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டது.
மிகவும் பின்தங்கிய பென்னாகரத்தில் மாவட்ட மருத்துவமனை அமைய உள்ளது. பென்னாகரத்தில் அரசு கலைக்கல்லூரி தொடங்க அறிவிக்கப்பட்டு உள்ளது.
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ரூ.1,330 கோடியில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டது. இன்று அதன் திட்ட மதிப்பு ரூ.1,928 கோடியாக உயர்ந்து விட்டது. தற்போது இத்திட்டம் தொடங்கப்பட்டு பணி நடந்து வருகிறது.
இப்படி பல திட்டங்களை நாம் செய்தாலும் இன்றுகூட முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர், இந்த தொகுதி மக்களுக்கு 63 ஆண்டுகளாக குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்று கூறியிருக்கிறார்.
ஏன் இவர் மத்திய சுகாதார அமைச்சராக இருந்தபோது, பன்றி காய்ச்சல் வராமல் தடுக்க முடிந்ததா? அது வருவதற்கு அவர்தான் காரணம் என்று வாதிட முடியும். ஆனால், கலைஞர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா கொள்கையை கடைபிடித்து வருபவர்.
எனவே, கலைஞரின் சாதனை தொடர்வதற்கும், பென்னாகரம் தொகுதி மக்கள் அரசின் சலுகைகள் பெறுவதற்கும் கலைஞரின் கரத்தை நாம் மேலும், மேலும் வலுப்படுத்த வேண்டும். இதற்கு நமது வேட்பாளர் இன்பசேகரன் வெற்றிபெற உதயசூரியன் சின்னத்தில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications